Subscribe:

interesting

விண்வெளியில் பறந்த முதல் இந்தியர் ராகேஷ் ஷர்மா பிறந்த தினம்: 13-1-1949

ராகேஷ் ஷர்மா விண்வெளியில் பறந்த முதல் இந்தியராவார். இவர் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள பாட்டியாலா என்னும் ஊரில் 1949-ம் ஆண்டு ஜனவரி மாதம் 13-ந்தேதி பிறந்தார். விண்வெளியில் பறந்த முதல் இந்தியர் ராகேஷ் ஷர்மா பிறந்த தினம்: 13-1-1949 ராகேஷ் ஷர்மா விண்வெளியில் பறந்த முதல் இந்தியராவார். இவர் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள பாட்டியாலா என்னும் ஊரில் 1949-ம் ஆண்டு ஜனவரி மாதம் 13-ந்தேதி பிறந்தார். ராகேஷ் ஷர்மா விண்வெளிக்குச் சென்ற 138-வது மனிதராவார். இவர் விண்வெளியில் 8 நாட்கள் தங்கியிருந்தார். இந்தியா சார்பில் விண்வெளியில் பறந்த முதல் வீரர் இவராவார். இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- 1840 - லோங் தீவில் லெக்சிங்டன் என்ற நீராவிக்கப்பல் மூழ்கியதில் 139 பேர் கொல்லப்பட்டனர். 1847 - கலிபோர்னியாவில் மெக்சிக்கோ- அமெரிக்கப் போர் காகுவெங்கா என்ற இடத்தில் எட்டப்பட்ட உடன்பாட்டின் மூலம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. 1908 - பென்சில்வேனியாவில் ரோட்ஸ் ஒப்பேரா மாளிகையில் தீப்பிடித்ததில் 171 பேர் கொல்லப்பட்டனர். 1915 - இத்தாலியின் அவசானோ பிரதேசத்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 29,800 பேர் கொல்லப்பட்டனர். 1930 - மிக்கி மவுஸ் கார்ட்டூன் துணுக்குகளாக முதன் முதலாக வெளிவரத்தொடங்கியது. 1938 - இங்கிலாந்து திருச்சபை சார்ல்ஸ் டார்வினின் கூர்ப்புக் கொள்கையை ஏற்றுக் கொண்டது. 1939 - ஆஸ்திரேலியாவில் விக்டோரியா மாநிலத்தில் 20,000 சதுர கிமீ நிலம் காட்டுத்தீயினால் அழிந்தது. 71 பேர் கொல்லப்பட்டனர்.

நகைச்சுவை நடிப்பில் புகழின் சிகரத்தை தொட்ட என்.எஸ்.கிருஷ்ணன்


தமிழ்நாட்டில் மட்டும் அல்ல, இந்தியாவிலேயே இணையற்ற நகைச்சுவை நடிகராக விளங்கியவர், "கலைவாணர்" என்.எஸ்.கிருஷ்ணன். உலகப் புகழ் பெற்று விளங்கிய சார்லி சாப்ளின் போல, சிரிப்புடன் சிந்தனையையும் கலந்து கொடுத்தவர்.

பெரும்பாலான நடிகர்களைப்போல, இளமையில் வறுமையை அனுபவித்தவர் கலைவாணர். நாகர்கோவிலை அடுத்த ஒழுகினசேரியில் 1908 நவம்பர் 29_ந்தேதி என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்தார். தந்தை பெயர் சுடலைமுத்து பிள்ளை. ஏழ்மை காரணமாக, மகனை பள்ளிக்கு அனுப்ப அவரால் முடியவில்லை.

கிருஷ்ணன் அவராகவே எழுதப்படிக்கக் கற்றுக்கொண்டார். ஒரு மளிகைக்கடையில் வேலைக்குச் சேர்ந்தார். அந்தக் காலத்தில் பெரும்பாலும் "பாய்ஸ் கம்பெனி"களே இருந்தன. நாடகத்தில் நடிப்பவர்கள் எல்லாம் சிறுவர்களே. டி.கே.எஸ். சகோதரர்களின் "ஸ்ரீ பாலசண்முகானந்தா சபா" அப்போது புகழ் பெற்று விளங்கியது.

திருவனந்தபுரத்தில் அந்த நாடகக்குழுவினர் நாடகம் நடத்தியபோது, என்.எஸ். கிருஷ்ணன் அதில் சேர்ந்தார். கிருஷ்ணனின் நடிப்பும், பாட்டும் சண்முகத்தை வெகுவாகக் கவர்ந்தன. இருவரும் நண்பர்கள் ஆனார்கள்.

"மனோகரா" நாடகத்தில் வசந்தன் வேடத்தில் நடித்து வந்தவர் சொல்லிக்கொள்ளாமல் போய்விட, அதில் கிருஷ்ணன் பிரமாதமாக நடித்தார். அது முதல் நகைச்சுவை வேடங்களில் நடிக்கலானார். அதில் புகழ் பெற்றார். நகைச்சுவைக் காட்சிகளைத் தாமே அமைத்து, வசனம் எழுதி நடிக்கும் ஆற்றலையும் பெற்றார். டி.கே.எஸ். சகோதரர்களின் புகழ் பெற்ற நாடகங்களில் ஒன்று "மேனகா".

துப்பறியும் கதை மன்னர் வடுவூர் துரைசாமி அய்யங்கார் எழுதிய நாவல் இது. நாடகத்தைப் பார்த்த எம்.சோமசுந்தரமும், எஸ்.கே.மொகிதீனும் (பிற்காலத்தில் ஜுபிடர் அதிபர்கள்) மேனகாவைப் படமாக்க முடிவு செய்தனர். நாடகக்குழு முழுவதையும் சினிமாவுக்காக ரூ.14 ஆயிரத்துக்கு ஒப்பந்தம் செய்தனர்.

மேனகா படத்தின் கதைச் சுருக்கம் வருமாறு:_ வராகசாமி, இளம் வக்கீல். இவருடைய மனைவி மேனகா. வராகசாமியின் சகோதரிகள், மேனகாவை கொடுமைப்படுத்துகிறார்கள். வராகசாமிக்கு மறுமணம் செய்ய ஏற்பாடு செய்வதுடன், மேனகாவை நைனா முகமது என்பவனுக்கு (வில்லன்) 5 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுவிட ஏற்பாடு செய்கிறார்கள். இதற்கு சாமா என்பவன் உதவி செய்கிறான்.

ஏமாற்றப்பட்ட மேனகா, நைனா முகமதுவிடம் இருந்து தன் கற்பைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்கிறாள். நைனா முகமதுவின் மனைவி நூர்ஜஹான் அவளைக் காப்பாற்றுகிறாள். மேனகா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகிறாள்.

அவள் ஒரு நடிகனுடன் ஓடிப்போய்விட்டதாக, வராகசாமியின் சகோதரிகளும், சாமாவும் வதந்தி பரப்புகின்றனர். இதை வராகசாமி நம்பி விடுகிறான். ஒரு நாள் நூர்ஜகானுடன் மேனகா காரில் செல்லும்போது, அதை வராகசாமி பார்த்து விடுகிறான்.

மேனகாவை கொன்று விடவேண்டும் என்ற நோக்கத்துடன் பின்தொடர்ந்து செல்கிறான். அப்போது காரில் அடிபட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுகிறான். மேனகா, நர்ஸ் வேடத்தில் அவனுக்கு பணிவிடை செய்கிறாள். இறுதியில் உண்மை வெளியாகிறது. வராகசாமியும், மேனகாவும் ஒன்று சேருகிறார்கள். சுடலை முத்து பிள்ளைக்கு குடிப்பழக்கம் உண்டு.

கிருஷ்ணனுக்குக் கிடைக்கும் சம்பளத்தின் ஒரு பகுதி, அப்பாவிடம் போய்விடும், குடிப்பதற்காக. சிறுவயதிலேயே கலைவாணர் நாடகங்கள் பார்ப்பார். நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. நாடகங்களைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே நாடகக் கொட்டகைக்குள் சோடா பாட்டில்களை விற்று வந்தார்.

நாடகக் கலையின் உத்திகளைத் தெரிந்து கொண்டார். பம்பாய் ரஞ்சித் ஸ்டூடியோவில் உருவான "மேனகா"வை ராஜா சாண்டோ டைரக்ட் செய்தார். கதாநாயகனாக டி.கே.சண்முகமும், கதாநாயகியாக கே.டி. ருக்மணியும், சாமாவாக என்.எஸ்.கிருஷ்ணனும் நடித்தனர்.

டி.கே.எஸ். சகோதரர்களில் ஒருவரான டி.கே.முத்துசாமி, பெண் வேடத்தில் (விதவைப் பெண்ணாக) பிரமாதமாக நடித்தார். 1935_ல் வெளிவந்த "மேனகா" பெரும் வெற்றி பெற்றது. தமிழ்த்திரை உலகில் மகத்தான வெற்றி கண்ட முதல் சமூகப் படம் "மேனகா".

திரை உலகில் எம்.ஜி.ஆர். எதிர் நீச்சல்



தமிழ்த்திரை உலகில் சூப்பர் ஸ்டாராகவும், பிறகு தமிழக முதல்_ அமைச்சராகவும் திகழ்ந்த எம்.ஜி.ஆர், சினிமா உலகில் அடியெடுத்து வைத்தபின் கதாநாயகன் அந்தஸ்தை பெற 11 ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது.

திரை உலகிலும், அரசியலிலும் சகாப்தம் படைத்த எம்.ஜி. ஆரின் முழுப்பெயர் எம்.ஜி.ராமச்சந்திரன். பெற்றோர் பெயர் கோபாலமேனன் _ சத்யபாமா. கோபாலமேனன், மாஜிஸ்திரேட்டாக பணிபுரிந்து வந்தார். அரூர், எர்ணாகுளம், திருச்சூர், கரூர் முதலிய இடங்களில் வேலை பார்த்தார். நீதி தவறாதவர் அவர்.

அநீதிக்கு துணை போக மறுத்ததால், அவரை வேறு ஊருக்கு மாற்றினார்கள். அதனால் மன வேதனை அடைந்த கோபாலமேனன், பதவியை ராஜினாமா செய்தார். மனைவியுடன் இலங்கை சென்றார். கோபாலமேனன் _சத்யபாமா தம்பதியினர் இலங்கையில் வசித்து வந்தபோது, 1917_ம் ஆண்டு ஜனவரி 17_ந்தேதி சுவாதி நட்சத்திரத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தார்.

கண்டியில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஹந்தானா என்ற இடத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தார். அந்த இடம் தமிழில் "பச்சைக்காடு" என்று அழைக்கப்படுகிறது. எம்.ஜி.ஆர். பிறந்த வீட்டில், தற்போது பள்ளிக்கூடம் நடந்து வருகிறது.

எம்.ஜி.ஆருக்கு எம்.ஜி. சக்ரபாணி, பாலகிருஷ்ணன் என்று இரண்டு அண்ணன்கள். கமலாட்சி, சுபத்ரா என்ற 2 தமக்கைகள். 4 குழந்தைகளுக்குப்பின் கடைக்குட்டியாகப் பிறந்தவர் எம்.ஜி.ஆர். பாலகிருஷ்ணன், கமலாட்சி, சுபத்ரா ஆகிய மூவரும் சிறு வயதிலேயே இறந்து விட்டனர்.

சக்ரபாணியையும், எம்.ஜி.ஆரையும் கோபாலமேனனும், சத்யபாமாவும் அன்புடன் வளர்த்து வந்தனர். எம்.ஜி.ஆருக்கு 2 வயதானபோது, குடும்பத்துடன் தாயகம் திரும்பினார், கோபாலமேனன். முன்பு செல்வச் செழிப்புடன் வாழ்ந்த அவர் குடும்பம், ஒத்தப்பாலம் என்ற இடத்தில் வாடகை வீட்டில் வசித்தது.

1920_ம் ஆண்டு, கோபாலமேனன் திடீரென்று மாரடைப்பால் காலமானார். அப்போது எம்.ஜி.ஆருக்கு மூன்று வயது. இரண்டு மகன்களையும் வளர்த்து ஆளாக்கும் பொறுப்பு சத்யா அம்மையார் தலையில் விழுந்தது. அவருடைய தம்பி நாராயணனும், குடும்ப நண்பர் வேலு நாயரும் அப்போது கும்பகோணத்தில் வசித்து வந்தனர்.

குழந்தைகளுடன் அங்கு சென்றார், சத்யபாமா. நாராயணன், "ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி" என்ற நாடகக் குழுவில் பின்பாட்டு பாடி வந்தார். கும்பகோணம் ஆணையடிப் பள்ளியில் சக்ரபாணியும், எம்.ஜி.ஆரும் சேர்ந்தார்கள்.

இலங்கையில் இருந்து கொண்டு வந்திருந்த பணமும், நகைகளும் தீரும் வரை அன்றாட வாழ்க்கை சிரமம் இன்றி கழிந்தது. அதன்பின், குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க அரும்பாடு பட்டார், சத்யபாமா. குடும்பக் கஷ்டத்தைப் போக்க சத்யபாமா அம்மையாரிடம் அவர் தம்பி நாராயணன் ஒரு யோசனை தெரிவித்தார்.

"சக்ரபாணியும், ராமச்சந்திரனும் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார்கள். நான் வேலை பார்க்கும் கம்பெனியில் சேர்த்துவிட்டால், விரைவில் முன்னுக்கு வந்து விடுவார்கள்" என்பதே அவருடைய யோசனை. குழந்தைகளை நல்ல முறையில் படிக்க வைக்க வேண்டும் என்று சத்யபாமா விரும்பிய போதிலும், குடும்ப சூழ்நிலையைக்கருதி அவர்களை நாடகத்தில் சேர்க்க சம்மதித்தார்.

அதைத்தொடர்ந்து, அவர்களை நாடகத்தில் சேர்த்துவிட்டார், நாராயணன். அப்போது அந்த கம்பெனியில் பி.யு.சின்னப்பா, டி.எஸ்.பாலையா ஆகியோர் நடிகர்களாக இருந்தனர். முதலில் சிறு வேடங்களில் நடித்து வந்த எம்.ஜி.ஆர், பிறகு கதாநாயகனாக நடித்தார். இந்த சமயத்தில்தான் தமிழில் பேசும் படங்கள் வரத்தொடங்கின.

1935_ம் ஆண்டு, எஸ்.எஸ். வாசன் எழுதிய "சதிலீலாவதி" என்ற கதை, சினிமாவாக தயாரிக்கப்பட்டது. அதில் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில் எம்.ஜி.ஆர். நடித்தார். எஸ்.எஸ்.வாசன், எம்.ஜி.ஆர், என்.எஸ்.கிருஷ்ணன், டி.எஸ். பாலையா ஆகிய நால்வருக்கும் இதுதான் முதல் படம்.

இந்தப் படத்தில் நடித்தபோது எம்.ஜி. ஆருக்கு வயது 19. முதல் படத்தில் நடித்ததற்காக அவருக்கு கிடைத்த சம்பளம் நூறு ரூபாய். அதை அப்படியே அம்மாவிடம் கொண்டு போய் கொடுத்து, ஆசி பெற்றார். எம்.ஜி.ஆரின் இரண்டாவது படம் "இரு சகோதரர்கள்". இதில் சக்ரபாணியும் நடித்தார். இந்தப்படம் வெற்றிகரமாக ஓடியது.

தொடர்ந்து சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த எம்.ஜி.ஆருக்கு திருமணம் செய்து வைக்க சத்யபாமா அம்மையார் விரும்பினார். "நடிப்புத்துறையில் முன்னேறிய பிறகுதான் திருமணம்" என்று எம்.ஜி.ஆர். கூறினார். ஆனால் தாயார் தொடர்ந்து வற்புறுத்தவே திருமணத்துக்கு சம்மதித்தார்.

பாலக்காட்டைச் சேர்ந்த பார்க்கவி என்கிற தங்கமணியை எம்.ஜி.ஆருக்கு திருமணம் செய்து வைத்தார், சத்யபாமா. துரதிருஷ்டவசமாக, பார்கவி சில ஆண்டுகளில் காலமானார். மனைவியின் மரணம் எம்.ஜி.ஆரை மிகவும் பாதித்தது. துறவிபோல் வாழ்ந்தார்.

மகனின் நிலையைக் கண்டு வருந்திய சத்யபாமா, அவருக்கு மறுமணம் செய்து வைக்க விரும்பினார். இதற்கு எம்.ஜி.ஆர். சம்மதிக்கவில்லை. எனினும், "பார்க்கவியை இழந்தது நமது துரதிருஷ்டம். என்றாலும், நீ வாழ்க்கையில் வெறுப்படைவது நல்லதல்ல.

அது உன் உடல் நலனையும், எதிர்காலத்தையும் பாதிக்கும்" என்று சத்யபாமா எடுத்துக் கூறவே, மறுமணத்துக்கு எம்.ஜி.ஆர். சம்மதித்தார். தாயார் பார்த்து முடித்த சதானந்தவதியை, 1942_ம் ஆண்டு ஆனி மாதம் 16_ந் தேதி எம்.ஜி.ஆர். மணந்தார். சென்னை வால்டாக்ஸ் ரோட்டில் 25 ரூபாய் வாடகை வீட்டில் எம்.ஜி.ஆர். குடும்பத்துடன் குடியேறினார்.

சதானந்தவதி முதல் முறையாக கருதரித்தபோது, காச நோய் பற்றிக் கொண்டது. அவருடைய வயிற்றில் உருவாகியிருந்த கரு, கர்ப்பப்பைக்கு வெளியே இருந்ததை டாக்டர்கள் கண்டு பிடித்தனர். அது அப்படியே வளர்ந்தால், தாயின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்று டாக்டர்கள் கருதினார்கள்.

எனவே, ஆபரேஷன் மூலம் கரு அகற்றப்பட்டது. 1947_ம் ஆண்டில், மாதம் 170 ரூபாய் வாடகைக்கு அடையாறில் ஒரு வீடு பார்த்து குடியேறினார், எம்.ஜி.ஆர். அங்கு வசித்தபோது, அன்னை சத்யா அம்மையார் காலமானார்.

அந்த துயரத்தில் இருந்து எம்.ஜி.ஆர். மீள வெகு காலம் பிடித்தது. 1949_ம் ஆண்டில், சதானந்தவதிக்கு இரண்டாவது முறையாக கருச்சிதைவு ஏற்பட்டது. அதன் பின், அவர் உடல் நலம் குன்றி படுத்த படுக்கையானார். 1962_ல் அவர் மறையும் வரை, நோயாளியாகவே இருந்து, மருந்து _ மாத்திரைகளுடன் வாழ்ந்தார்.

எம்.ஜி.ஆர். தன் மனைவியை கண்ணும் கருத்துமாக கவனித்துக்கொண்டார். 20 ஆண்டு காலம், சதானந்தவதியுடன் குடும்பம் நடத்திய போதிலும், அவர் இல்லறத் துறவியாகவே வாழ்ந்தார். குடும்பத்தில் சோதனை நிறைந்திருந்தபோதிலும், படத்துறையில் படிப்படியாக முன்னேறிக்கொண்டிருந்தார்.

"வீர ஜெகதீஷ்", "மாயா மச்சீந்திரா", "பிரகலாதா", "சீதா ஜனனம்" ஆகிய படங்களில் சிறு வேடங்களில் நடித்தார். 1941_ல் "ஏழிசை மன்னர்" எம்.கே.தியாகராஜ பாகவதருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு, "அசோக்குமார்" படத்தின் மூலம் கிடைத்தது. எம்.ஜி.ஆரின் ஆரம்ப காலப் படங்களில் குறிப்பிடத்தக்க படம் "அசோக்குமார்.

" அசோக்குமாரைத் தொடர்ந்து "தமிழறியும் பெருமாள்", "தாசிப்பெண்", "ஹரிச்சந்திரா" (ஜெமினி), "சாலிவாகனன்", "மீரா", "ஸ்ரீமுருகன்" முதலிய படங்களில் நடித்தார். பின்னணி பாடும் முறை கண்டுபிடிக்கப்படாத காலக்கட்டம் அது. சொந்தக் குரலில் பாடத்தெரிந்தவர்கள்தான் கதாநாயகனாக நடிக்க முடியும்.

அழகும், திறமையும் உள்ள எம்.ஜி.ஆர், கதாநாயகனாக உயர முடியாமல் போனதற்கு அதுதான் காரணம். 1946_ல் பின்னணி பாடும் முறை கண்டுபிடிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். வாழ்க்கையிலும் திருப்பம் ஏற்பட்டது.

உலகத் தமிழ் மாநாடு: சென்னை கடற்கரையில் 10 சிலைகள் திறப்பு




உலகத் தமிழ் மாநாட்டையொட்டி, 2_1_1968 அன்று 10 சிலைகள் திறக்கப்பட்டன. இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு, 1968 ஜனவரி 1, 2, 3 ஆகிய தேதிகளில் சென்னையில் சீரும் சிறப்புமாக நடைபெற்றது. விழாவையொட்டி, 11 தமிழ்ச் சான்றோர்கள் சிலைகள் அமைக்கப்பட்டன.

அவற்றில் அண்ணா சிலை, 1_ந்தேதியன்று சென்னை அண்ணா சாலையில் (ரவுண்டானாவில்) திறந்து வைக்கப்பட்டது. மீதி 10 சிலைகளும் கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்தன. திறப்பு விழா 2_ந்தேதி மாலை 6_30 மணிக்கு நடைபெற்றது. சிலை திறப்பு விழாவுக்காக கடற்கரை காந்தி சிலை அருகே 12 அடி உயர மேடை அமைக்கப்பட்டு இருந்தது.

மேடையில் முதல்_அமைச்சர் அண்ணா, சிலை திறப்பாளர்களும், தலைமை தாங்குகிறவர்களும் உட்கார்ந்து இருந்தார்கள். திருவள்ளுவர் சிலை வழங்கிய நடிகர் சிவாஜி கணேசன், நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன், மேயர் அபிபுல்லாபேக் ஆகியோரும் மேடையில் இருந்தனர்.

முதலில் உலகத் தமிழ் மாநாட்டு அமைப்புச் செயலாளர் பெருமாள் முதலியார் வரவேற்றுப் பேசினார். அதன்பின் அமைச்சர் நெடுஞ்செழியன் தலைமையில் திருவள்ளுவர் சிலையை முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் திறந்தார்.

தொடர்ந்து, அவ்வையார், கம்பர், ஜி.யு.போப், கால்டுவெல், பாரதியார், பாரதிதாசன், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார், வீரமாமுனிவர், கண்ணகி ஆகியோர் சிலைகள் திறக்கப்பட்டன. மேடையின் அருகில் இந்த சிலைகளின் படங்கள் மாட்டப்பட்டு இருந்தன.

ஒவ்வொரு சிலையைச் சுற்றிலும் மின்சார விளக்குகள் பொருத்தப்பட்டு இருந்தன. சிலை திறப்பாளர்கள் ஒவ்வொருவரும் பேசி முடித்ததும், மேஜை முன்னால் உள்ள பொத்தானை அழுத்தினார்கள். உடனே குறிப்பிட்ட அந்த சிலையின் படத்தைச்சுற்றி மின்சார விளக்குகள் எரிந்தன.

அதே நேரத்தில் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள சிலையின் திரை விலகியது. இப்படியே ஒவ்வொரு சிலையும் திறக்கப்பட்டன. சிலையைத் திறந்தவர்களின் பெயரும், தலைமை தாங்கியவர்களின் பெயர்களும் வருமாறு:_

1. திருவள்ளுவர் சிலை (சிவாஜிகணேசன் வழங்கியது. தலைவர்:_ அமைச்சர் இரா.நெடுஞ்செழியன். திறப்பாளர்:_ கி.ஆ.பெ. விசுவநாதம்)

2. அவ்வையார் சிலை. (சென்னை நகரசபை வழங்கியது. தலைவர்:_ அமைச்சர் சத்தியவாணிமுத்து. திறப்பாளர்:_ எஸ்.எஸ்.வாசன்)

3. கம்பர் சிலை. (கோவை மாவட்ட மக்கள் வழங்கியது. தலைவர்:_ அமைச்சர் ஏ.கோவிந்தசாமி. திறப்பாளர்:_ பழைய முதல்_மந்திரி பக்தவச்சலம்)

4. ஜி.யு.போப் சிலை. (தென்னிந்திய திருச்சபை வழங்கியது. தலைவர்:_ சட்டப்பேரவைத் தலைவர் சி.பா.ஆதித்தனார். திறப்பாளர்:_ பிஷப் நியூபிகின்)

5. கால்டுவெல். (தென்னிந்திய திருச்சபை வழங்கியது. தலைவர்:_ மேல்_சபைத் தலைவர் மாணிக்கவேலர். திறப்பாளர்:_ பன்மொழிப்புலவர் கா.அப்பாத்துரையார்)

6. பாரதியார் சிலை. (சென்னை நகரசபை வழங்கியது. தலைவர்:_ அமைச்சர் மாதவன். திறப்பாளர்:_ நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை)

7. பாரதிதாசன் சிலை. (சென்னை நகரசபை வழங்கியது. தலைவர்:_ அமைச்சர் முத்துசாமி. திறப்பாளர்:_ மு.வரதராசனார்)

8. கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் சிலை. (சென்னை நகரசபை வழங்கியது. தலைவர்:_ உணவு அமைச்சர் மதியழகன். திறப்பாளர்:_ பி.டி.ராஜன்)

9. வீரமாமுனிவர் சிலை. (மைலாப்பூர் ஆர்ச் பிஷப் வழங்கியது. தலைவர்:_ சுகாதார அமைச்சர் சாதிக்பாட்சா. திறப்பாளர்:_ ஆர்ச் பிஷப் அருளப்பா)

10. கண்ணகி சிலை. (தமிழக ஆசிரியர்கள் _ மாணவர்கள் அளித்தது. தலைவர்:_ பொதுப்பணித்துறை அமைச்சர் மு.கருணாநிதி. திறப்பாளர்:_ ம.பொ.சிவஞானம்)

முடிவில் தமிழக அரசு தலைமை செயலாளர் சி.ஏ.ராம கிருஷ்ணன் நன்றி தெரிவித்துப் பேசினார். விழா முடிந்ததும் அண்ணாவும், மற்ற தலைவர்களும் ஒவ்வொரு சிலை வைக்கப்பட்டு இருக்கும் இடத்திற்கும் சென்று வணக்கம் செலுத்தினார்கள்.

விழாவைக்காண கடற்கரையில் திரளான கூட்டம் கூடியிருந்தது. கூட்டத்தின் எண்ணிக்கை 3 லட்சத்திற்கும் அதிக மாக இருக்கும் என்று ஒரு பிரமுகர் மதிப்பிட்டார். அமைச்சர்களின் குடும்பத்தினரும், சினிமா நடிகர்_ நடிகைகள் பலரும் விழாவைக்காண வந்திருந்தனர்.

விழா முழுவதும் சினிமா படமாக எடுக்கப்பட்டது. உலகத் தமிழ் மாநாடு தபால் தலை வெளியிடுவது நிறுத்தப்பட்டது உலகத் தமிழ் மாநாட்டையொட்டி, ஒரு தபால் தலை வெளியிடவேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசாங்கம் கேட்டுக்கொண்டது.

அதன் பேரில் மத்திய அரசு ஒரு தபால் தலை வெளியிட சம்மதித்தது. ஆனால், இந்த தபால் தலையில் ஒரு எழுத்துக் கூட தமிழில் இல்லை. இந்தி எழுத்துக்களே பொறிக்கப்பட்டு இருந்தன. இந்த தபால் தலை வெளியீட்டு விழா 3-1-1968 அன்று பல்கலைக்கழக தேர்வு மண்டபத்தில் நடைபெறுவதாக இருந்தது.

ஆனால் தபால் தலை வெளியிடுவது நிறுத்தப்பட்டது. ``மாநாட்டையொட்டி வெளியிடப்பட இருந்த தபால் தலையை வெளியிடாமல் நிறுத்தவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது'' என்று முதல்-அமைச்சர் அண்ணா அறிவித்தார்.

இது குறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

``விழாவின் புனித தன்மையை களங்கப்படுத்தும் விதத்தில் இந்த தபால் தலை இருக்கிறது. மாநாட்டுக்கு வந்து இருக்கும் பிரதிநிதிகளுக்கு இது வேதனை உண்டாக்கும். ஆகவே தபால் தலை வெளியிடுவது நிறுத்தப்பட்டு விட்டது.

இவ்வாறு அண்ணா கூறினார்.

உலகத் தமிழ் மாநாட்டு தபால் தலை வெளியிடுவது ரத்து செய்யப்பட்டது பற்றி தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சி.சுப்பிரமணியம் கருத்து தெரிவித்தார்.

``யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற சொற்களை தமிழில் பொறித்து இருக்கவேண்டும். தமிழ் மாநாட்டையொட்டி வெளியிடப்படுகின்ற தபால் தலையில், தமிழ் இருக்கவேண்டும். அப்படி இல்லாததால் தபால் தலையை வெளியிடாதது சரிதான்'' என்று சி.சுப்பிரமணியம் தெரிவித்தார்.

உழைப்பு... மன உறுதி... நம்பிக்கை


ரக்ஷா பந்தன் விழா என்பதால் எனது கார் டிரைவருக்கு விடுப்பு அளித்துவிட்டேன். மற்றவர்கள் இன்றைய தினத்தில் மகிழ்வாக இருக்கும்போது எனது கார் டிரைவரை மட்டும் நான் ஏன் சிரமப்படுத்த வேண்டும்?'' என்று யதார்த்த உணர்வுடன் கூறுகிறார் அத்தொழிலதிபர். அவரது தொழிலின் வெற்றி ரகசியம் புரிந்தது.
சென்னை அருகே உள்ள தாம்பரத்தைச் சேர்ந்த அந்த முதல் தலைமுறை தொழில்முனைவோர்தான் வி.சந்திரசேகர். மிகவும் துடிப்பான, சுறுசுறுப்பான இளைஞரான அவர், ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
ரூபாய் 1 லட்சம் முதலீட்டில் "தாரிணி இண்டர்நேஷனல்' எனும் நிறுவனத்தைத் தொடங்கி, 15 ஆண்டுகளில் ரூ.350 கோடி சொத்து மதிப்புடைய நிறுவனமாக உயர்த்தியுள்ளார். இதெல்லாம் குறுகிய காலத்தில் எப்படி சாத்தியமாயிற்று? இதோ அவரே கூறுகிறார்.
""சென்னையில் உள்ள தாம்பரம்தான் நான் பிறந்த இடம். எனது தந்தை ஆஞ்சநேயலு, ஆந்திரத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். விமானப் படையில் முதுநிலை வாரண்ட் ஆபிஸராகப் பணியாற்றியவர். குடும்பத்தில் நான் உள்பட 6 சகோதரர்கள், ஒரு சகோதரி. தாயார் ராஜேஸ்வரி. தஞ்சாவூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். எம்.எஸ்சி. படித்தவர்.
எனது பள்ளிப் படிப்பை சென்னையிலும் மெக்கானிக்கல் என்ஜீனியர் படிப்பை கான்பூர் ஆர்.இ.சி. கல்லூரியிலும் முடித்தேன்.
அப்போது என்ஜினீயர் படிப்புக்கு ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் செலவானது. எனது தந்தையார் தனது செலவைச் சுருக்கி எனது படிப்புக்குப் பணம் அனுப்பினார்.
கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு மேற்கொண்டு படிக்க நான் விரும்பியபோது அதற்கான செலவை ஈடுகட்ட தந்தையால் முடியவில்லை. இதனால், நுழைவுத் தேர்வை எழுதி ஸ்காலர்ஷிப்பில் தில்லி பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படித்தேன்.
முதுகலைப் படிப்புக்குப் பிறகு 1991-ம் ஆண்டில் வளாகத் தேர்வின் மூலம் சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு மின் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தேன். அங்கு பணியின்போது கிடைத்த அனுபவமே தொழில் தொடங்க வேண்டும் என்ற வேட்கையை என்னுள் ஏற்படுத்தியது. மின் உற்பத்தி, அதற்கான வடிவமைப்பு, பகிர்மானம், மின் விநியோகம் உள்ளிட்ட பல விஷயங்களில் அனுபவ அறிவைப் பெற்றேன்.
ரூபாய் 1 லட்சம் சம்பளம் பெற்ற அந்த வேலையை உதறிவிட்டு இந்தியா திரும்பினேன்.
வீட்டில் எனது தந்தைக்கும், எனக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. என் மீதுள்ள அக்கறையில் எப்படியாவது நான் ஒரு வேலையில் சேரவேண்டும் என்று வற்புறுத்தினார்.
தாயார் ராஜேஸ்வரி மறைமுகமாக ஊக்கம் அளித்தார். தந்தைக்குத் தெரியாமல் தனது நகைகளை விற்றும், வீட்டை அடமானம் வைத்தும் ரூபாய் 1 லட்சம் கொடுத்தார். அதுதான் எனது வெற்றியின் முதல்படி. அந்தப் பணத்துடன் வீட்டைவிட்டு தில்லி வந்தேன்.
அமர் காலனியில் ஒரு சிறிய அலுவலகம் அமைத்தேன். சிறிய அறையில் செயல்பட்ட அந்த அலுவலகத்தில், எனது தந்தை தில்லியில் பணியாற்றிய காலத்தில் அவர் பயன்படுத்திய பழைய மேஜையும், இரு நாற்காலிகளும் அலுவலகத்தை நிறைத்தன. அந்த மேஜையைப் பார்க்கும்போதெல்லாம் தந்தை அதில் அமர்ந்து என்னைக் கண்காணிப்பதாகவே நினைத்துக் கொள்வேன்.
தாரிணி இண்டர்நேஷனல் எனும் பெயரில் நிறுவனம் தொடங்கி நீர் மின் உற்பத்திக்கான டிûஸன் ஆலோசனை வழங்கும் என்ஜினீயரிங் கன்சல்டன்ஸி பணியை அளித்தோம். எனது நிறுவனத்தில் அப்போது நானே முதலாளி, நானே தொழிலாளி.
ஆரம்பத்தில் ஓராண்டுக்கு பெரிய அளவில் "ஆர்டர்' ஏதும் கிடைக்கவில்லை. அதற்காக நான் வருத்தப்படவோ, மனம் குழம்பவோ இல்லை. நம்பிக்கையுடன் காத்திருந்தேன்.
முதல்முதலாக, நீர் மின் திட்டத்திற்கான வடிவமைப்பை அளிக்கும் திட்டத்துக்கான ரூபாய் 8 லட்சம் பெறுமான ஆர்டர் இமாச்சலப் பிரதேச அரசிடமிருந்து கிடைத்தது. அப்பணியைத் திறம்பட முடித்துத் தந்தேன். தனியார் நிறுவனங்கள் பல எங்கள் நிறுவனத்திற்கு ஆர்டர்கள் தர முன்வந்தன. தனியார் நிறுவனங்களும் மின் உற்பத்தியில் ஈடுபடுவதற்கு அப்போது அரசு அனுமதி அளித்த காலம் அது.
நீர் மின் திட்டங்களுக்கான டிûஸன் ஆலோசனையை நல்ல முறையில் அளித்ததால், பல தனியார் நிறுவனங்களின் ஆர்டர்கள் எங்களைத் தேடி வந்தன. அதன் மூலம் நல்ல வருவாய் கிடைத்தது. அத்தொகையை நீர் மின் உற்பத்தித் திட்டங்களில் முதலீடு செய்தோம்.
தென் ஆப்ரிக்கா, ஜாம்பியா, ஜிம்பாப்வே, கானா உள்ளிட்ட பல வெளி நாடுகளிலும் அரசின் சார்பில் மேற்கொள்ளப்படும் மின் பகிர்மானம் மற்றும் மின் விநியோகத் திட்டப் பணிகளை நிறைவேற்றுவதற்காக ஒப்பந்த அடிப்படையில் பணிகள் செய்து தந்தோம். இதற்காக பல நாடுகளுக்குச் சென்று வருகிறேன்.
தில்லி தவிர, சென்னை, பெங்களூரூ, ஆமதாபாத் உள்ளிட்ட இடங்களில் எங்கள் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. தற்போது பொறியாளர்கள், களப் பணியாளர்கள் ஆகிய திறன்மிகு பணியாளர்கள் உள்பட சுமார் 400 பேர் வேலை செய்கின்றனர்.
தாரிணி இண்டர்நேஷனல் நிறுவனம் தற்போது ஈக்விட்டி பங்குதாரர்கள் பங்களிப்புடன் தாரிணி குழும நிறுவனமாக வளர்ந்துள்ளது. நிறுவனத்தின் சொத்து
மதிப்பு ரூபாய் 350 கோடியாகும். ஆண்டுக்கு ரூபாய் 180 கோடிக்கு மேல் நிறுவனத்தின் விற்றுமுதல் உள்ளது.
மகாராஷ்டிராவில் ரூபாய் 100 கோடி மதிப்பீட்டில் சர்க்கரை ஆலையை அமைத்து வருகிறோம். சமூகப் பணியாக சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு கட்டித் தந்துள்ளோம். வனவிலங்கு பாதுகாப்புக்கும் உதவி வருகிறோம்.
இந்தியாவில் மின் உற்பத்தியானது தேவைக்கு ஏற்ப இல்லை. உற்பத்திக்கும் தேவைக்குமான இடைவெளி 10 ஆண்டுகளில் மேலும் அதிகரிக்கும். இதுபோன்ற சூழலில் நீர் மின் உற்பத்தித் திட்டங்களுக்கு நல்ல தொழில் வாய்ப்பு உள்ளது.
எங்களிடம் தேவையான ஆர்டர்கள் இருந்து வருவதால் அடுத்த 5, 6 ஆண்டுகளில் எங்கள் நிறுவனத்தின் சொத்து மதிப்பை ரூபாய் 1000 கோடியாக உயர்த்தத் திட்டமிட்டுள்ளோம்.
தற்போது, இந்திய அளவில் தனியார் நீர் மின் உற்பத்தி நிறுவனங்களில் 5-வது பெரிய நிறுவனமாக எங்கள் நிறுவனம் விளங்குகிறது. சிறந்த நிறுவனத்திற்கான பல விருதுகளையும் பெற்றுள்ளோம்.
நான் சென்னையில் இருந்து தில்லிக்கு 1993-ல் ஆண்டில் வந்தபோது ஏதும் கொண்டு வரவில்லை. உழைப்பையும் மனஉறுதியையும் நம்பிக்கையையும் மட்டுமே மூலதனமாகக் கொண்டிருந்தேன். அதுதான் இந்த உயரத்திற்கு என்னை அழைத்துச் சென்றுள்ளது.
ஜாம்பியா நாட்டில் ஆதிவாசிகள் வசிக்கும் காட்டுப் பகுதியில் 50 கிலோ மீட்டர் தூரத்திற்குப் பகிர்மானப் பணிக்காக உள்கட்டமைப்பு வேலைகள் மேற்கொள்ள எங்கள் நிறுவனத்திற்கு ஆர்டர் தந்திருந்தனர். இப்பணியை மேற்கொள்ள அங்குள்ள பழங்குடி மக்களிடம் மிகுந்த எதிர்ப்பு இருந்தது.
அவர்களிடம் பேசி அவர்களுடைய தேவையை அந்நாட்டு அரசிடம் எடுத்துக்கூறி சுமூகத் தீர்வு காண உதவினேன். இதையடுத்து, அந்தத் திட்டத்தை நாங்கள் சிறப்பாக முடித்தோம். அம்மக்கள் என்னை "ஷகா' என்று அழைப்பர். பிறகுதான் தெரிந்தது, "ஷகா' என்றால் "ஆசியப் புலி' என்று அர்த்தமாம்!

40 அடி நீள கழிவுநீர் கால்வாய்க்குள் சிக்கிய தொழிலாளி:மனிதநேயத்துடன் காப்பாற்றிய ஆட்டோ டிரைவர்


செங்குன்றம்:மது போதையால், மனநலம் பாதிக்கப்பட்ட தொழிலாளி, 40 அடி நீள கழிவு நீர் கால்வாயில் விழுந்து சிக்கினார். அரை மணி நேர போராட்டத்திற்குப் பின், ஆட்டோ டிரைவரின் உதவியால், அத்தொழிலாளி உயிருடன் மீட்கப்பட்டார்.
சென்னை செங்குன்றம் அடுத்த தீர்த்தக் கரையம்பட்டு, மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் முருகன், 40. கூலித் தொழிலாளியான இவர், குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி, லேசாக மன நலமும் பாதிக்கப்பட்டவர். இவரது மனைவி கட்டுமான வேலை செய்து வருகிறார்.நேற்று பகல் 12 மணி அளவில், செங்குன்றம் நகர தி.மு.க., அலுவலகம் அருகே, கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த 40 அடி நீளம், 10 அடி அகலம் மற்றும் 3 அடி ஆழம் கொண்ட கழிவுநீர் கால்வாயின் சாலை தடுப்புச் சுவர் மீது, முருகன் அமர்ந்திருந்தார். திடீரென்று கால்வாய்க்குள் விழுந்தவர், அப்படியே ஐந்தாறு அடி முன்னோக்கி தவழ்ந்து சென்று, குறுகிய இடத்தில் சிக்கினார்.

அவர் உள்ளே விழுந்ததைப் பார்த்த சிலர், அருகில் உள்ள செங்குன்றம் போலீஸ் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் கேசவன், எஸ்.ஐ., கண்ணன், போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர். தீயணைப்பு வீரர்கள் கால்வாய்க்குள் செல்லத் தயங்கினர்.

அப்போது, அங்கு வந்த செங்குன்றம், அண்ணா தெருவைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சீனிவாசன், 32 என்பவர், துணிச்சலுடன் தீயணைப்பு வீரர்கள் வைத்திருந்த கயிற்றை இடுப்பில் கட்டிக் கொண்டு கால்வாயின் எதிர்த்திசையில் இறங்கி, ராணுவ வீரர் போல் ஊர்ந்தபடி உள்ளே சென்றார்.சில நிமிட போராட்டத்திற்குப் பின், அவரை பாதுகாப்பாக மீட்டு, தீயணைப்பு நிலைய வீரர்கள் உதவியுடன் வெளியே கொண்டு வந்தார். அவரை, வீரர்கள் கழுவி சுத்தம் செய்தனர். பின், சம்பவ இடத்திற்கு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில், தொழிலாளி முருகனுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.

மனிதநேயத்துடன் துணிச்சலாக செயல்பட்ட ஆட்டோ டிரைவர் சீனிவாசனை பொதுமக்கள், போலீஸ் மற்றும் தீயணைப்பு அதிகாரிகள் பாராட்டினர். முதலுதவிக்குப் பின் முருகனை, அவரது உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

பட்டத்திற்கு' ஆசைப்பட்ட அம்மா: பரிவுடன் நிறைவேற்றிய பிள்ளைகள்


சென்னை: "அம்மா ஆசைப்பட்டதற்காக, கட்டில் வாங்கித்தந்தேன்... புடவை வாங்கித் தந்தேன்... நகை வாங்கித் தந்தேன்... கார் வாங்கித் தந்தேன்' என பெற்றோரின் தேவையை நிறைவேற்றிய பலரைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், சற்று வித்தியாசமாக, அம்மா ஆசைப்பட்டார் என்பதற்காக, அவரை பட்டதாரியாக்கி, அழகு பார்த்திருக்கின்றனர் அவருடைய பிள்ளைகள்.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர், கவுசல்யா செல்லமுத்து, தன்னுடைய, 55வது வயதில், பட்டதாரியாகி இருக்கும் கவுசல்யாவின், "பட்டத்திற்கு' பின்னால் சுவாரஸ்யமான சில சம்பவங்கள் உள்ளன. கவுசல்யாவிற்கு நான்கு சகோதரிகள்; இரண்டு சகோதரர்கள். கவுசல்யாவின் அப்பா, பெண்களை விட, ஆண்கள் கல்வி கற்பதுதான் சிறந்தது என எண்ணி, பெண் குழந்தைகளை பள்ளிப் படிப்பு வரையும், ஆண் குழந்தைகளை கல்லூரிப்படிப்பு வரையும் படிக்க வைத்துள்ளார். கவுசல்யாவிற்கோ படிப்பின் மீது, கொள்ளை ஆசை. பெற்றோர் படிக்க வைத்ததோ, பதினொன்றாம் வகுப்பு வரை. ஆனால், ஒன்பது ஆண்டுகள் கழித்து, பிளஸ் 2 தேர்வை வெற்றிகரமாக எழுதியிருக்கிறார். திருமணமாகி புகுந்த வீட்டிற்குச் சென்ற பின்பும், படிப்பு மோகம் விடவில்லை."நமக்குத்தான் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை; நம்முடைய குழந்தைகளையாவது, நன்றாகப் படிக்க வைக்க வேண்டும்' என எண்ணி, தன் இரு குழந்தைகளுக்கும், தரமான கல்வி கிடைக்க ஏற்பாடு செய்திருக்கிறார் கவுசல்யா. அவருடைய முயற்சி வீண் போகவில்லை. முதல் மகன் முரளி, 28, பொறியாளராகவும், இளைய மகள் டாக்டராகவும் பணியாற்றி வருகின்றனர்.

ஒருநாள் இருவரும் சேர்ந்து, "அம்மாவிற்கு நிறைவேறாத ஆசை என்று ஏதாவது இருக்கிறதா என்று கேட்போம்; அப்படி ஏதும் இருக்குமாயின் அதை நிறைவேற்றி வைப்போம்' என ஆலோசித்துள்ளனர். அதன்படி, கவுசல்யாவிடம் ஆசையை சொல்லுமாறு கேட்டுள்ளனர்.தங்க நகையோ, புண்ணிய ஸ்தலங்களுக்கு சுற்றுலாவோ, காரோ கேட்பார் என அவர்கள் நினைத்திருக்கிறார்கள். ஆனால், கவுசல்யா கேட்டதோ வேறு. "எனக்கு பட்டப் படிப்பு படிக்கணும்னு ரொம்ப ஆசை. அதான் நிறைவேறாத ஆசை' என்று சொல்ல இருவருக்கும் ஆச்சரியமாயிருந்திருக்கிறது. எப்படியாவது அம்மாவைப் படிக்க வைக்க வேண்டும் என எண்ணி, "சென்னை பல்கலைக் கழக' திறந்தவெளி பல்கலை முதல்வர் சுவாமி நாதனை சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். 55 வயதில் அம்மாவுக்கு வந்த பட்டப்படிப்பு ஆசையும், அதனை நிறைவேற்ற பிள்ளைகள் காட்டும் ஆர்வமும் அவரை, நெகிழச் செய்ய, உடனடியாக பி.பி.ஏ., படிக்க ஏற்பாடு செய்திருக்கிறார்.

தமிழ் வழியில் பள்ளிப்படிப்பை முடித்த கவுசல்யா, பி.பி.ஏ., படித்தது ஆங்கில வழியில். படிப்பின் மேலிருந்த காதல், அவரை பட்டதாரியாக மாற்றியது. சமூகத்தைப் பற்றியும், கல்வியின் அவசியத்தைப் பற்றியும் கவுசல்யா எழுதிக்கொண்டிருக்கும் கதைகள், விரைவில் நூலாக வெளிவர உள்ளது

சொத்தை விற்று திருக்குறள் பரப்பும் பள்ளி ஆசிரியை:டேனியல் வி. ராஜா


சென்னை: கற்றல், கற்பித்தல் என்கிற நிலையைத் தாண்டி, திருக்குறளை அனைத்து இடங்களிலும் பரவச் செய்வதை, தன் வாழ்நாள் கடமையாகச் செய்து வருகிறார் பள்ளி ஆசிரியை ரூபி ரெஜினா.

காட்டாங்குளத்தூர் ஒன்றியம் கூடலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், ரூபி ரெஜினா ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். ஆறு ஆண்டுகளுக்கு முன், பாடத்தில் இருந்த திருக்குறள்களை மட்டும் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தவருக்கு, அதிலிருந்த கருத்துச் செறிவுகள் பிடித்துப் போக, ஒட்டுமொத்த நூலையும் மாணவர்களிடமும், பொது மக்களிடமும் சேர்க்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.பள்ளிப் பாடநூலில் இருபது திருக்குறள்கள் இருந்தால், பத்து மனப்பாடப் பகுதியாக இருக்கும். அதைப் படிப்பதற்கே மாணவர்கள் திணறிவிடுவர். இதைக் கருத்தில் கொண்ட ரூபி, "அனைத்து திருக்குறள்களையும் படிக்கும் மாணவர்களுக்கு பரிசு' என்று அறிவித்திருக்கிறார். அறிவித்தபடியே திருக்குறள் நூலையும் பரிசளித்திருக்கிறார்.அதற்கடுத்த முயற்சியாக, 100 குறள் சொன்னால் 100 ரூபாய் என்று அறிவித்திருக்கிறார். மாணவர்களிடையே உற்சாகம் கூட, குறள்களின் எண்ணிக்கைக்கேற்ப பரிசுத்தொகையையும் உயர்த்தியிருக்கிறார்.

திருக்குறளை மக்களிடமும் சேர்க்க வேண்டுமானால், ஒரு இயக்கமாக செயல்பட வேண்டும் என்று நினைத்த ரூபி, 2007ல் "உலகப் பொதுமறை மன்றத்தை' தொடங்கியிருக்கிறார்.தான் வாங்கும் சம்பளத்தில், 5,10 புத்தகங்களாக வாங்கி வழங்கிக் கொண்டிருந்த ரூபிக்கு, நிறைய திருக்குறள் புத்தகங்களை வழங்க வேண்டும் என்கிற ஆசை வந்திருக்கிறது.
ரூபி கொடுக்க நினைத்தது, 100, 200 புத்தகங்கள் அல்ல. 1330 குறள்களை 100 மடங்காக்கி, ஒரு லட்சத்து 33 ஆயிரம் புத்தகங்கள்(!) வழங்க திட்டமிட்டிருக்கிறார். ஆனால், அதற்கான பொருளாதார வசதியில்லை . இருந்தும் தன்னுடைய ஆசையை நிறைவேற்ற, புறநகர் பகுதியில் வாங்கிப் போட்டிருந்த நிலத்தை, 24 லட்சத்திற்கு விற்று, புத்தகங்களை வாங்கிவிட்டார்.

நிலத்தை விற்று திருக்குறள் வாங்கும் அளவிற்கு, திருக்குறள் மீது அப்படி என்ன பற்று என்று கேட்டபோது, ""இனம், மொழி, மதம் கடந்து அனைவரும் பின்பற்றக் கூடிய உன்னதமான கருத்துக்கள் நிறைந்த ஒரு புத்தகம் எது என்றால் நிச்சயம் அது திருக்குறள் தான்.திருக்குறளை நம் வாழ்விற்கான மையக் கருவாகக் கொண்டு வாழ்ந்தோமானால், அதை விட சிறப்பான வாழ்க்கை எதுவுமில்லை. அக, புற வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை விஷயங்களும், திருக்குறளில் இருக்கின்றன.ஒவ்வொரு குடிமகனும் திருக்குறளை நெஞ்சில் நிறுத்தி, அதன்படி வாழ்ந்தால் உலகில் எவ்விதமான குற்றங்களும் நிகழாது. திருக்குறள் என் வாழ்க்கை முறையை மாற்றியிருக்கிறது.இந்தச் சேவையை, என் உறவினர்கள் பலவாறாய் விமர்சிக்கிறார்கள். ஆனால், இது எனக்கு மனநிறைவைத் தருகிறது'' என்கிறார் ரூபி. இவரின் திருக்குறள் "ஆர்வத்தை' கண்ட பல்வேறு அமைப்புகள், இவருக்கு தங்கள் அமைப்பில் முக்கிய பொறுப்புகளை வழங்கியுள்ளன.

""கடந்த ஆண்டு பெங்களூருவில் நடைபெற்ற திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவின் போது, 133 கவிஞர்கள் கவி பாடிய நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது மிகவும் சந்தோஷமான தருணம்'' என நெகிழும் ரூபி, சிறைக் கைதிகளையும் விட்டு வைக்கவில்லை.விடுமுறை நாட்களில், மத்திய சிறைச் சாலைகளுக்குச் செல்லும் ரூபி, திருக்குறள் நூலை வழங்கி, அதிலுள்ள அறிவுரைகளை கடைபிடிக்கும்படி வலியுறுத்துகிறார். புத்தகங்களை வழங்குவதில் மட்டுமல்ல, பரிசு கொடுப்பதிலும் ரூபி பிரமிப்பூட்டுகிறார். 1330 குறள்களை மனப்பாடமாகச் சொல்லும் முதல் 33 பேருக்கு, 10,000 ரூபாய் வழங்கும் திட்டத்தைத் தொடங்கி, ஏழு பேருக்கு வழங்கியும் விட்டார்.திருக்குறளுக்காய் தன்னை அர்பணித்துவிட்ட இப்பெண்மணிக்கு, திருக்குறள் மாமணி, குறள்நெறிச் செல்வி, குறள் அரசி, தமிழ்த்தென்றல் உள்ளிட்ட 44 விருதுகளை பல்வேறு அமைப்புகள் வழங்கியுள்ளன. இந்தச் செலவுகளுக்காக, யாரிடமும் பணம் வாங்காத ரூபிக்கு, "திருக்குறள் தியான மண்டபம்' அமைக்கும் ஆசை உள்ளது. இப்பணிக்காக நல்லெண்ணம் படைத்தவர்களின் உதவியை எதிர்பார்த்திருக்கிறார். ரூபி நிச்சயம் இதனை செய்து முடிப்பார்.

எப்படி என்பதற்கு விடையாக ஒரு திருக்குறள் சொல்கிறது...
""எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர்
திண்ணியர் ஆகப் பெறின்''
ஒரு பொருளை அடைய எண்ணி, அதனை அடைவதற்குரிய செயலில் வலிமையுடையவராய் இருந்தால், எண்ணப்பட்ட பொருளை எண்ணியபடியே அடைவர்.

நீதி தேவதையின் கோவில் சுத்தமாகட்டும்


நீதி தேவதையின் கோவில் சுத்தமாகட்டும்

டாக்டர்.வி.நடராஜ், புவனகிரியிலிருந்து எழுதுகிறார்: இந்திய பார்லிமென்ட் வரலாற்றில், முதல் முறையாக விசாரணைக்காக, பார்லிமென்டில் நிறுத்தப்பட்டு, சாதனை படைத்தவர் தான் கோல்கட்டா ஐகோர்ட் நீதிபதி சவுமித்ரா சென். வேலியே, பயிரை மேய்ந்த கதையாக, குற்றம் புரிபவர்களை தண்டிக்கும் நீதிபதியே, குற்றவாளி
கூண்டில் நிறுத்தப்படுவது காலத்தின் கோலம்.

"இவர் நிதியை கையாடல் செய்தவர், நீதி விசாரணைகளில் தவறான தகவல்களை தந்தவர்' என, இவர் மேல் பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. நம் இந்திய
அரசியல் சாசனப்படி, தவறு செய்யும் ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் பதவிகளை பறிக்கும் அதிகாரம் பார்லிமென்டிற்கு மட்டுமே உண்டு.ஊழல்களின் விசுவரூபங்கள், புற்றீசல் போல் வெளிவந்து, அவைகளுக்கு கோர்ட் விசாரணை நடத்திக் கொண்டிருக்கும் இந்த கால கட்டத்தில், நீதிபதி ஒருவரே, ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு, பார்லிமென்டில் விசாரிக்கப்படுவது, நம் இந்திய ஜனநாயக தத்துவத்திற்கு கிடைத்த வெற்றி.

அன்னா ஹசாரேவின் தார்மீக போராட்டம், இந்திய அரசியல் களத்தை தூய்மைப் படுத்தி, லஞ்ச லாவண்யம் இல்லாததும், ஊழல்கள் அற்றதுமான ஒரு எதிர்காலத்திற்கு வித்திட்டுள்ள வேளையில், சவுமித்ரா சென் போன்றோர், நீதித்துறையில் ஊழல்
களுக்காக அடையாளம் காட்டப்படுவது, அன்னாவின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.
அதே வேளையில், குற்றப்பின்னணியுடைய சவுமித்ரா சென் எப்படி நீதிபதியானார் என்ற வினாவையும் எழுப்பியுள்ளது. எனவே, எதிர்காலத்தில் இந்தியாவில் நீதிபதிகளை நியமனம் செய்யும் நடைமுறைகளையும், மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

அதற்கு, தேசிய நீதித்துறை கமிஷன், ஒரு அமைப்பை உருவாக்கி, நீதிபதிகள் நியமனங்களை, முறையாக கையாளப்படுத்துவதே, எதிர்காலத்தில், சவுமித்ரா போன்ற ஊழல் பேர்வழிகள் நீதி தேவதையின் கோவில்களில், பூசாரிகளாய் நடமாடுவது தடுக்கப்படும்.

தற்கொலைதீர்வல்ல...ஏ.பி.வாசுதேவன், தி.நகர், சென்னையிலிருந்து எழுது
கிறார்: காஞ்சிபுரம் தாலுகா அலுவலக வளாகத்தில், 19, வயதுடைய செங்கொடி என்ற இளம்பெண், தன் உடம்பில் பெட்ரோல் ஊற்றி, தீக்குளித்து இறந்திருக்கிறாள். "மக்கள் மன்றம்' என்ற அமைப்பைச் சேர்ந்த இந்த பெண், ராஜிவ் கொலை வழக்கில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரை விடுவிக்கக் கோரி, தீக்குளித்ததாக கூறப்படுகிறது.
இந்த மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி தமிழகத்தின் சில அரசியல்
கட்சியைச் சேர்ந்தவர்களும், திரை உலகத்தினரும் போராடி வருகின்றனர்.

"மரணத்திற்கு இன்னொரு மரணம் தான் தீர்வா?' என்று கேட்டு, போராடி வருகின்றனர்.
சட்டம் பயின்ற மூன்று பெண்களும், பேரறிவாளன் தாயாரும், வைகோவும் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். அவர்களெல்லாம், மரணத்தை தழுவவில்லை; "போராட்டம் மூலமே
தீர்வைக் காண்போம்' என்பதில், உறுதியாக இருந்தனர்.

சட்டப்படியே கூட அவர்கள் தூக்கு மேடையிலிருந்து தப்பி, ஆயுள் தண்டனைக்கு மாற்றப்பட்டால், அதை பார்ப்பதற்கு செங்கொடி இருக்க வேண்டாமா? வாழ்வில் இறுதிக் கட்டத்தில் இருக்கும் பேரறிவாளனின் தாயார் கூட, உண்ணா நோன்பைத் தானே தேர்ந்தெடுத்திருக்கிறார்... உயிர்த் தியாகம் பண்ணும் முடிவுக்கு வரவில்லை யே?
மனித உயிர் விலை மதிப்பற்றது என்பதை, எத்தனை பேர் சொல்லக் கேட்டிருக்கிறோம். அப்படிப்பட்ட உயிரை போக்கிக் கொள்வதால், கண்ட பலன் தான் என்ன!

முதல்வர்நோக்கு சரியே!துரை.பரந்தாமன், கொசப்பேட்டை, வேலூரிலிருந்து எழுதுகிறார்: மத்திய அரசு அமல்படுத்த உத்தேசித்து, சமீபத்தில் அறிவித்த, "கலவர தடுப்பு சட்டம்' எங்கு கலவரம் நடந்தாலும், பெரும்பான்மையினர் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்க வழி கோலுகிறது.இந்நிலையில், திருவண்ணாமலையில், 50 ஆண்டு பழமையான ஒரு கோவிலின் மணியோசையும், மந்திர ஒலிகளும் இடையூறு செய்வதாகக் கூறி, கோவில் அகற்றப்பட வேண்டும் எனக் கூறி, மாற்று மதம் சார்ந்த ஒரு மத்திய அரசு டாக்டர் நோட்டீஸ் அனுப்பியுள்ள தாக செய்தி வெளிவந்துள்ளது. இது, நியாயமானதா? உடனே, மக்களும் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில், ஒருவேளை மேற்குறிப்பிட்ட மத்திய அரசு சட்டம் கொண்டு வரப்பட்டால், இச்சம்பவத்தில், அதன் நடவடிக்கை யார் மீது? போராடும் மக்கள் மீதா அல்லது போராட்டத்துக்கு காரணமான உணர்வுகளை சீண்டிய, அந்த டாக்டர் மீதா...?இதை யோசிக்கும் போது, மேற்படி சட்டத்தை கடுமையாக எதிர்க்கும் தமிழக முதல்வரின் செயல், 100 சதவீதம் சரியென்று தோன்றுகிறது.

நல்ல வேளைஅண்ணாதுரைஇல்லை...அ.சேகர், புவனகிரியிலிருந்து எழுதுகிறார்: தி.மு.க.,வின் முதல் முதல்வராகவும், கட்சியின் உயிர் நாடியாகவும், அன்று இருந்தார் அண்ணாதுரை. அவர், காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு, 1967ல் வழிவகுத்து, தி.மு.க.,வை
அரியணையில் அமர்த்தியவர்.அவர், எந்த ஒரு ஊழல் குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல், தன் குடும்பத்தினர் யாரையும் கட்சியில் நெருங்க விடாமல், இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார். பார்லிமென்ட் நடைமுறைகளை மதித்தவர். அண்ணாதுரையின் குடும்பத்தினர், இன்று கடனில் வாழ்ந்து, இறந்து வருவது நாம் அறிந்ததே.

ஆனால், அதன்பின், கருணாநிதி ஆட்சியின் போது தான், கழகத்தில் குடும்ப அரசியல் என்பது உட்புகுந்தது. நாளடைவில், குடும்பமே கழகமாக மாறியது. இன்றைய முதல்வர், சமீபத்தில் தந்த ஒரு புள்ளிவிவரக் கணக்கில், முன்னாள் முதல்வரின் குடும்ப உறுப்
பினர்கள், 365 பேர் என சொல்லப்பட்டிருக்கிறது.நிச்சயம், அத்தனை உறுப்பினர்களும் கோடீஸ்வரர்களாகத் தான் இருப்பர். அதை விட, இவர்களின், "கைத்தடிகளாக' இருந்த பொட்டு சுரேஷ், மின்னல் கொடி, அட்டாக் பாண்டி, எஸ்.ஆர்.கோபி, குடமுருட்டி சேகர் போன்ற பலர், பல கோடிகளுக்கு அதிபதியாகியுள்ளது எப்படி என்று தெரியவில்லை.

அவர்கள் அனைவருக்கும், ஸ்டாலினும், அழகிரியும், ஒவ்வொரு சிறைக்குச் சென்று, ஆறுதல் கூறிவருவது, அவர்களிடையே எந்த அளவுக்கு நெருங்கிய தொடர்பு என்பதை தெளிவாக்குகிறது.நல்லவேளை, அண்ணாதுரை இன்று உயிருடன் இல்லை. இருந்திருந்தால், "ஏன் இந்த கட்சியை ஆரம்பித்தோம்' என, மனம் வருந்தியிருப்பார்.

"உடலில் வலி இருக்கு;உள்ளத்தில் வலிமை இருக்கு!'

"உடலில் வலி இருக்கு;உள்ளத்தில் வலிமை இருக்கு!'

மூன்று வயதில், போலியோவால் பாதிக்கப்பட்ட சாய்கிருஷ்ணன்: எனக்குச் சிறு வயதிலிருந்தே புகைப்படம் எடுப்பதில் ஆர்வம். வீட்டில் நடக்கும்
கல்யாண நிகழ்ச்சி முதல் நண்பர்கள் வீட்டில் நடக்கும் எல்லா நிகழ்ச்சிக்கும், நான் தான் போட்டோகிராபர்.ஏழாவது படிக்கும் போது, எங்க அப்பா, எனக்கு ஒரு, "ஹாட்-ஷாட்' கேமரா வாங்கிக் கொடுத்தார். அன்றைக்குத் தொடங்கியது எனக்கும், புகைப்படத்துக்குமான உறவு. ஒருநாள், சொந்த ஊருக்கு புறப்பட்டுக் கொண்டிருந்த போது, என் கண்ணில், செய்தித்தாளில் ஒரு விளம்பரம் தெரிஞ்சது.அதில், "உடல் திறன் குறைபாடுள்ளவர்கள் ஒலிம்பிக்சிலிருந்து உருவாக்கப்பட்ட, எபிலிம்பிக்சில் பங்கு பெறலாம்'னு போட்டிருந்தது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, சென்னையில் நடந்த தகுதிச் சுற்றுக்கு, என், "ஹாட்-ஷாட்' கேமராவையும், மன உறுதியையும் நம்பி பங்கு பெற்றேன்.

கடந்த, 2004ம் ஆண்டு, தேசிய அளவில் டில்லியில் நடந்த போட்டியில், நான் எடுத்த புகைப்படம், எனக்கு தங்கப் பதக்கம் வாங்கிக் கொடுத்தது. 2006ம் ஆண்டு, ஜப்பானில் நடந்த சர்வதேச எபிலிம்பிக்ஸ் போட்டிக்கு, புகைப்படப் பிரிவில், இந்தியா சார்பாக நான் தேர்வு பெற்றேன். ஷரத் அக்ஷர் என்பவர் தான், கேமரா சார்ந்த அனைத்து தொழில்நுட்பங்களையும் எனக்கு சொல்லிக் கொடுத்தார். நான் இந்த அளவுக்கு உயர்ந்து வந்திருப்பதற்கு, என் நண்பர்கள் குமாரசாமி, சுரேஷ் தான் காரணம்.

உடலில் வலி இருக்கு தான்; அதைத் தாண்டி, உள்ளத்தில் வலிமை இருக்கு. என்னை மாதிரி கஷ்டப்படுகிறவர்களுக்கு, இந்த புகைப்படக் கலையை விதையாய் விதைச்சுட்டுப் போவேன்.தென்கொரியாவில் நடைபெறவுள்ள சர்வதேச எபிலிம்பிக்ஸ் போட்டியில், நிச்சயம் தங்கப் பதக்கம் வெல்வேன். இதன் மூலம், உலக அரங்கில் இந்தியாவை தலை நிமிரச் செய்வேன்!

தமிழக வரலாற்றில் டிசம்பர் 8-ன் முக்கியத்துவம்

டிசம்பர் 8- தமிழக வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் பெற்ற நாள். எழுபது ஆண்டுகளுக்கு முன்பு நம் தமிழ்நாட்டில் சாதி கொடுமைகளும், உயர்வு, தாழ்வும் மக்களிடையே படர்ந்திருந்த காலம் 1940.

அப்போது தமிழகம் முழுவதும் இரயில்வே உணவகங்கள் இயங்கி வந்தது. இந்த சேவையை இரண்டு நிறுவனங்கள் தனித்தனியே நடத்தி வந்தது. அவை எஸ்.ஐ.ஆர். (சவுத் இந்தியன் இரயில்வே) நிறுவனமும், எம்.எஸ்.எம். நிறுவனமும் ஆகும். தனித்தனி இயக்கமாக இயங்கினாலும் இரண்டுக்கும் ஒரு ஒற்றுமையுண்டு, அது அப்போது இருந்த முக்கிய பிரச்சனையான பெரியார் எப்போதும் எடுத்துரைக்கும் சாதி உயர்வு, தாழ்வு.

ஒவ்வொரு உணவகத்திற்கும் இரண்டு வாயில்கள் இருக்கும். ஒரு வாயிலில் பிராமனர் என்றும், மற்றொண்டில் மற்றவர்கள் என்றும் பலகை எழுதி தொங்கவிடப்பட்டிருக்கும். அந்த காலத்திலெல்லாம் நினைத்தவர்கள் நினைத்த இடத்தில் உட்கார்ந்து சாப்பிட முடியாது.

அந்தந்த சாதியினருக்கென்று ஒதுக்கப்பட்ட இடத்தில்தான் சாப்பிட வேண்டும். அப்படிதான் இந்த இரண்டு இரயில்வே உணவகங்களும் இயங்கி வந்தது.

பிராமனர் என்ற வாயிலில் அவர்கள் மட்டுமே நுழைய வேண்டும். மற்றவர்கள் என்ற வாயிலில் பிற சாதியினர் நுழையலாம். மனித இனத்தில் அனைவரும் ஒருவர் என்ற கருத்தில் இப்பிரச்கனைக்காக பெரியார் குரல் கொடுத்தார்.

இதையடுத்து இரண்டு வாயில்கள் இருக்கக்கூடாது, அகற்றப்படவேண்டும் என்று போராட்டங்களும், மறியல்களும் நடைப்பெற்றது.

பின்பு பெரியார் வெளியிட்ட அறிக்கையில் எஸ்.ஐ.ஆர். மற்றும் எம்.எஸ்.எம். நிறுவனங்களும் உடனடியாக இந்த வேறுபாட்டை நீக்க வேண்டும் என்றும், மனித இன உயர்வு, தாழ்வை ஒழிக்கவேண்டும் என்றும் கூறினார்.

1940, டிசம்பர் 8 ந்தேதி பெரியாரின் கோரிக்கையை ஏற்று எம்.எஸ்.எம். நிறுவனம் தங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்து உணவகங்களிலும் இரண்டு வாயில்களை ஒன்றாக்கியது. இதற்காக தந்தை பெரியார் எம்.எஸ்.எம். நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்தார்.

ஆனால் எஸ்.ஐ.ஆர். இந்த கோரிக்கையை ஏற்க மறுத்தது. இதற்காக அந்த நிறுவனம் பெரியாருக்கு காரணத்தையும் கூறியது.

அந்த காரணம்: இரு வாயில்களையும் ஒன்றாக்கினால் பிராமனர்கள் யாரும் உணவகத்திற்கு வரமாட்டார்கள். அப்படி நடந்தால் எங்கள் நிறுவனம் பெரிய இழப்பை சந்திக்கும் என்பதாகும்,

இதற்கு பெரியார் கூறியதாவது:-

இரயிலில் பயணிப்பவர்கள்தான் உணவகங்களில் வந்து சாப்பிடுகிறார்கள். அதில் பிராமனர்கள் குறைவாகத்தான் இருப்பார்கள். ஏனெனில் மற்ற சாதிக்காரர்களைவிட பிராமனர்கள் குறைவாக உள்ளார்கள். அதிலும் இது போன்ற வேற்றுமையை எண்ணும் பிராமனர்கள் மிகவும் குறைவு.

மேலும் பிராமன ஆச்சாரங்களை முற்றிலுமாக கடைப்பிடிப்பவர்கள் நிச்சயமாக உணவகங்களில் வந்து சாப்பிடமாட்டார்கள். அவர்கள் வீட்டிலேயே உணவை தயார் செய்து கொண்டு வந்துவிடுவார்கள். ஆகையால் உணவகத்திற்கு எந்த இழப்பும் வராது என்று பெரியார் கூறினார்.

1941, மார்ச் 31-ம் நாள் பெரியார் கரூரில் மாநட்டிற்கு ஏற்பாடு செய்திருந்தார். அதற்கு முன்னாள் எஸ்.ஐ.ஆர். நிறுவனமும் பெரியாரின் கோரிக்கையை ஏற்றது. உணவகங்களில் இரு வாயில்கள் அகற்றப்பட்டன. இதற்காக கரூர் மாநாட்டில் பெரியார் எஸ்.ஐ.ஆர். நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்தார்.

மார்ச். 30, 1940-ம் ஆண்டு தமிழக்தில் உள்ள அனைத்து இரயில்வே உணவகத்திலும் நுழைவாயில்கள் ஒன்றாக்கப்பட்டது. ஆகவே அத்தினத்தை இழிவு ஒழிந்த நாளாக கொண்டாட வேண்டும் என்று பெரியார் அம்மாநாட்டில் அறிவித்தார்.

இந்நாள் கொண்டாட பட முக்கிய காரணமாக அமைந்த டிசம்பர் 8ந்தேதியை தமிழ் சமுதாயம் வரலாற்றில் முக்கிய நாளாக ஏற்றுக்கொண்டது.

உலகத் தமிழ் மாநாடு: சென்னை கடற்கரையில் 10 சிலைகள் திறப்பு





உலகத் தமிழ் மாநாட்டையொட்டி, 2_1_1968 அன்று 10 சிலைகள் திறக்கப்பட்டன. இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு, 1968 ஜனவரி 1, 2, 3 ஆகிய தேதிகளில் சென்னையில் சீரும் சிறப்புமாக நடைபெற்றது. விழாவையொட்டி, 11 தமிழ்ச் சான்றோர்கள் சிலைகள் அமைக்கப்பட்டன.

அவற்றில் அண்ணா சிலை, 1_ந்தேதியன்று சென்னை அண்ணா சாலையில் (ரவுண்டானாவில்) திறந்து வைக்கப்பட்டது. மீதி 10 சிலைகளும் கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்தன. திறப்பு விழா 2_ந்தேதி மாலை 6_30 மணிக்கு நடைபெற்றது. சிலை திறப்பு விழாவுக்காக கடற்கரை காந்தி சிலை அருகே 12 அடி உயர மேடை அமைக்கப்பட்டு இருந்தது.

மேடையில் முதல்_அமைச்சர் அண்ணா, சிலை திறப்பாளர்களும், தலைமை தாங்குகிறவர்களும் உட்கார்ந்து இருந்தார்கள். திருவள்ளுவர் சிலை வழங்கிய நடிகர் சிவாஜி கணேசன், நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன், மேயர் அபிபுல்லாபேக் ஆகியோரும் மேடையில் இருந்தனர்.

முதலில் உலகத் தமிழ் மாநாட்டு அமைப்புச் செயலாளர் பெருமாள் முதலியார் வரவேற்றுப் பேசினார். அதன்பின் அமைச்சர் நெடுஞ்செழியன் தலைமையில் திருவள்ளுவர் சிலையை முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் திறந்தார்.

தொடர்ந்து, அவ்வையார், கம்பர், ஜி.யு.போப், கால்டுவெல், பாரதியார், பாரதிதாசன், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார், வீரமாமுனிவர், கண்ணகி ஆகியோர் சிலைகள் திறக்கப்பட்டன. மேடையின் அருகில் இந்த சிலைகளின் படங்கள் மாட்டப்பட்டு இருந்தன.

ஒவ்வொரு சிலையைச் சுற்றிலும் மின்சார விளக்குகள் பொருத்தப்பட்டு இருந்தன. சிலை திறப்பாளர்கள் ஒவ்வொருவரும் பேசி முடித்ததும், மேஜை முன்னால் உள்ள பொத்தானை அழுத்தினார்கள். உடனே குறிப்பிட்ட அந்த சிலையின் படத்தைச்சுற்றி மின்சார விளக்குகள் எரிந்தன.

அதே நேரத்தில் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள சிலையின் திரை விலகியது. இப்படியே ஒவ்வொரு சிலையும் திறக்கப்பட்டன. சிலையைத் திறந்தவர்களின் பெயரும், தலைமை தாங்கியவர்களின் பெயர்களும் வருமாறு:_

1. திருவள்ளுவர் சிலை (சிவாஜிகணேசன் வழங்கியது. தலைவர்:_ அமைச்சர் இரா.நெடுஞ்செழியன். திறப்பாளர்:_ கி.ஆ.பெ. விசுவநாதம்)

2. அவ்வையார் சிலை. (சென்னை நகரசபை வழங்கியது. தலைவர்:_ அமைச்சர் சத்தியவாணிமுத்து. திறப்பாளர்:_ எஸ்.எஸ்.வாசன்)

3. கம்பர் சிலை. (கோவை மாவட்ட மக்கள் வழங்கியது. தலைவர்:_ அமைச்சர் ஏ.கோவிந்தசாமி. திறப்பாளர்:_ பழைய முதல்_மந்திரி பக்தவச்சலம்)

4. ஜி.யு.போப் சிலை. (தென்னிந்திய திருச்சபை வழங்கியது. தலைவர்:_ சட்டப்பேரவைத் தலைவர் சி.பா.ஆதித்தனார். திறப்பாளர்:_ பிஷப் நியூபிகின்)

5. கால்டுவெல். (தென்னிந்திய திருச்சபை வழங்கியது. தலைவர்:_ மேல்_சபைத் தலைவர் மாணிக்கவேலர். திறப்பாளர்:_ பன்மொழிப்புலவர் கா.அப்பாத்துரையார்)

6. பாரதியார் சிலை. (சென்னை நகரசபை வழங்கியது. தலைவர்:_ அமைச்சர் மாதவன். திறப்பாளர்:_ நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை)

7. பாரதிதாசன் சிலை. (சென்னை நகரசபை வழங்கியது. தலைவர்:_ அமைச்சர் முத்துசாமி. திறப்பாளர்:_ மு.வரதராசனார்)

8. கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் சிலை. (சென்னை நகரசபை வழங்கியது. தலைவர்:_ உணவு அமைச்சர் மதியழகன். திறப்பாளர்:_ பி.டி.ராஜன்)

9. வீரமாமுனிவர் சிலை. (மைலாப்பூர் ஆர்ச் பிஷப் வழங்கியது. தலைவர்:_ சுகாதார அமைச்சர் சாதிக்பாட்சா. திறப்பாளர்:_ ஆர்ச் பிஷப் அருளப்பா)

10. கண்ணகி சிலை. (தமிழக ஆசிரியர்கள் _ மாணவர்கள் அளித்தது. தலைவர்:_ பொதுப்பணித்துறை அமைச்சர் மு.கருணாநிதி. திறப்பாளர்:_ ம.பொ.சிவஞானம்)

முடிவில் தமிழக அரசு தலைமை செயலாளர் சி.ஏ.ராம கிருஷ்ணன் நன்றி தெரிவித்துப் பேசினார். விழா முடிந்ததும் அண்ணாவும், மற்ற தலைவர்களும் ஒவ்வொரு சிலை வைக்கப்பட்டு இருக்கும் இடத்திற்கும் சென்று வணக்கம் செலுத்தினார்கள்.

விழாவைக்காண கடற்கரையில் திரளான கூட்டம் கூடியிருந்தது. கூட்டத்தின் எண்ணிக்கை 3 லட்சத்திற்கும் அதிக மாக இருக்கும் என்று ஒரு பிரமுகர் மதிப்பிட்டார். அமைச்சர்களின் குடும்பத்தினரும், சினிமா நடிகர்_ நடிகைகள் பலரும் விழாவைக்காண வந்திருந்தனர்.

விழா முழுவதும் சினிமா படமாக எடுக்கப்பட்டது. உலகத் தமிழ் மாநாடு தபால் தலை வெளியிடுவது நிறுத்தப்பட்டது உலகத் தமிழ் மாநாட்டையொட்டி, ஒரு தபால் தலை வெளியிடவேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசாங்கம் கேட்டுக்கொண்டது.

அதன் பேரில் மத்திய அரசு ஒரு தபால் தலை வெளியிட சம்மதித்தது. ஆனால், இந்த தபால் தலையில் ஒரு எழுத்துக் கூட தமிழில் இல்லை. இந்தி எழுத்துக்களே பொறிக்கப்பட்டு இருந்தன. இந்த தபால் தலை வெளியீட்டு விழா 3-1-1968 அன்று பல்கலைக்கழக தேர்வு மண்டபத்தில் நடைபெறுவதாக இருந்தது.

ஆனால் தபால் தலை வெளியிடுவது நிறுத்தப்பட்டது. ``மாநாட்டையொட்டி வெளியிடப்பட இருந்த தபால் தலையை வெளியிடாமல் நிறுத்தவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது'' என்று முதல்-அமைச்சர் அண்ணா அறிவித்தார்.

இது குறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

``விழாவின் புனித தன்மையை களங்கப்படுத்தும் விதத்தில் இந்த தபால் தலை இருக்கிறது. மாநாட்டுக்கு வந்து இருக்கும் பிரதிநிதிகளுக்கு இது வேதனை உண்டாக்கும். ஆகவே தபால் தலை வெளியிடுவது நிறுத்தப்பட்டு விட்டது.

இவ்வாறு அண்ணா கூறினார்.

உலகத் தமிழ் மாநாட்டு தபால் தலை வெளியிடுவது ரத்து செய்யப்பட்டது பற்றி தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சி.சுப்பிரமணியம் கருத்து தெரிவித்தார்.

``யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற சொற்களை தமிழில் பொறித்து இருக்கவேண்டும். தமிழ் மாநாட்டையொட்டி வெளியிடப்படுகின்ற தபால் தலையில், தமிழ் இருக்கவேண்டும். அப்படி இல்லாததால் தபால் தலையை வெளியிடாதது சரிதான்'' என்று சி.சுப்பிரமணியம் தெரிவித்தார்.

தன்னம்பிக்கை இருந்தால் சாதிக்கலாம்!'

"தன்னம்பிக்கை இருந்தால் சாதிக்கலாம்!'

நீச்சல் போட்டியில் சாதித்த மாதவி லதா: எனது சொந்த ஊர் ஆந்திரா அருகில் சத்துப்பள்ளி. நான் பிறந்த ஏழு மாதத்தில், போலியாவால் பாதிக்கப்பட்டேன். பின், 10ம் வகுப்பு வரை பெற்றோர், தோழி, சகோதரி தோளில் பள்ளிக்கு சென்றேன். என் இடது கால் சரிவர நிற்க முடியாததால் எங்கு சென்றாலும் தவழ்ந்து தான் செல்வேன். அவ்வளவு கஷ்டத்திலும் நல்ல மாணவி என பெயர் வாங்கினேன். கல்லூரி போகும் அளவுக்கு உடல் நிலை ஒத்துழைக்காததாலும், என்னை போன்றவர்களுக்கு கல்லூரி கட்டமைப்புகள் இல்லாததாலும், தனியாக பி.எஸ்சி., படித்தேன். மற்றவர்கள் தயவில் வாழ்ந்தது போதும் என்று நினைத்து, இரும்பு, "வாக்கர்' பயன்படுத்தி நடக்க ஆரம்பித்தேன். எல்.ஐ.சி.,யில் வேலைக்காக விண்ணப்பித்து, எல்லா தேர்விலும், தேர்ச்சி பெற்றும் அந்த வேலை கிடைக்கவில்லை. பின், மீண்டும் வங்கி தேர்வு எழுதினேன். அதுக்கும் நான் சரிவர மாட்டேன் என்று கூறினர். நீண்ட போராட்டத்துக்கு பின், ஸ்டேட் பேங்க் ஆப் ஹைதாராபாத்தில் வேலை கிடைத்தது. அந்த வேலை செய்து கொண்டே, டிரேடிங், ஷேர் மார்க்கெட் தொடர்பாக படித்தேன். பின், தனி ஆளாக சாதிக்கும் நம்பிக்கை எனக்குள் வந்தது. அரசு வேலையையும், ஆந்திராவையும் விட்டு விட்டு, சென்னை வந்தேன். எல்லாம் நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில், முதுகு வலி ஏற்பட ஆரம்பித்தது. அதற்கு, "பிசியோதெரபிஸ்ட்' மூலம், "ஹைட்ரோதெரபி' எடுத்தேன். பின், நீச்சல் தான் சிகிச்சை என்று ஆனது; தனியாக நீச்சல் பயிற்சி மேற்கொண்டேன். இப்பொழுது, "கார்ப்பரேட் ஒலிம்பியாட் போட்டி'யில் பதக்கம் வெல்லும் அளவுக்கு தயாராகி விட்டேன். என்னை போல மாற்றுத்திறனாளிகளுக்கு, நீச்சல் கற்றுக் கொடுத்து வருகிறேன். தன்னம்பிக்கை இருந்தால் சாதிக்கலாம்!

"டிக்கியில் ஏணி; ஏறினால் கட்டு கட்டாய் பணம்!'

சட்டசபை தேர்தல் நேரத்தில், பணம் கடத்தலை நள்ளிரவில் பிடித்த, திருச்சி ஆர்.டி.ஓ., சங்கீதா: அப்போது நான், திருச்சி மேற்கு சட்டசபை தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலர். நள்ளிரவு, 1.30 மணிக்கு தேர்தல் பணிகளை முடித்துவிட்டு, கேம்ப் ஆபீஸ் இல்லத்தில் தூங்கச் சென்றேன். தொலைபேசியில் ஆண் குரல் அழைப்பு. திருச்சி பொன்னகர் பகுதியில், சாலையோரமாக இரண்டு தனியார் பஸ்களுள் ஏதோ ஒன்றில், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக, கட்டுக் கட்டாக பணம் இருப்பதாக தகவல்; அதுவும், கோடிக்கணக்கில். போனில் பேசியவர், "எப்படியு ம் 20 கோடி ரூபாய் இருக்கும்' என கூறிய தகவலை, நம்பவும் முடியவில்லை; நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. ஏனெனில், தமிழகத்தில் பரவலாக, அந்த சமயத்தில்தான் வாகன சோதனைகளின்போது, லட்ச லட்சமாய் பணம் கையகப்படுத்தப்பட்டது.
தகவல் கிடைத்த மறு நிமிடமே, உதவியாளர் மற்றும் கார் ஓட்டுனர் என இருவருடன், கிளம்பினேன். குறிப்பிட்ட இடத்தை சேர்ந்த போது, நள்ளிரவு 1.45 மணி; ஆள் அரவம் ஏதுமில்லை. "2 மணிக்கெல்லாம் பஸ் மூவ் ஆயிடும்' என, தகவல் தந்திருந்தார் அந்த நபர். ஆர்.டி.ஓ., வாகனத்தை சற்று தூரத்தில் நிறுத்திவிட்டு, அங்கிருந்தே கண்காணித்தோம். என்ன ஆச்சரியம்! அடுத்த, ஐந்து நிமிடத்தில், இன்னோவா கார் ஒன்று, அந்த பஸ்கள் அருகே வந்து நின்றது. இனிமேலும் தாமதித்தால், பஸ்சை கிளப்பிக் கொண்டு போய் விடுவார்களோ என்ற அச்சம். இன்னோவா காரை நெருங்கியபோது, உள்ளே மூன்று நபர்கள், ஏதும் தெரியாத மாதிரி உட்கார்ந்திருந்தனர். முதலில் கார் சோதனையிடப்பட்டது; அதில் ஏதுமில்லை. அடுத்து, ஒரு பஸ் சோதனைக்குட்படுத்தப்பட்டது. அதிலும் ஒன்றுமே இல்லை. மற்றொரு பஸ்சின் உள்ளே தோண்டி துழாவப்பட்டது; எதுவுமே இல்லை. மேற்கூரையில் லக்கேஜ்கள் மட்டுமே இருந்தன. சந்தேகம் எழுந்தது, ஆனால், அந்த பஸ்சில் மேலே ஏற படிகள் ஏதுமில்லை.
டிக்கியை திறந்தால், அதில் ஓர் ஏணி. மேலேறிச் சென்றால், அங்கு ஐந்து பெரிய டிராவல் பைகள்; ஒவ்வொன்றாய் திறந்து பார்த்தால், ஐநூறு ரூபாய் கட்டு, ஆயிரம் ரூபாய் கட்டு என கட்டு கட்டாக பணம்!

ஒலிம்பிக் போட்டி வரலாறு

ஒலிம்பிக் போட்டி கி.மு. 776- ஆம் ஆண்டு கிரிஸ் நாட்டின் ஒலிம்பியா நகரில் தொடங்கியது. ஒலிம்பிக் போட்டி நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வந்தது.
ஒலிம்பிக் போட்டி வரலாறு

கி.பி. 393-ல் அப்போதைய கிரேக்க அரசர் தியோடிசியல் இந்த ஒலிம்பிக் போட்டிக்கு தடைவிதித்தார். பின்னர் 1890-ல் மீண்டும் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கப்பட்டன.

கிரேக்கர்களின் கடவுள்களில் ஒருவரான ஜியஸ் கடவுளை போற்றும் வகையில் கொண்டாடப்பட்ட திருவிழாவின் ஒரு பிரிவுதான் ஒலிம்பிக்போட்டி. இந்த போட்டியில் கிரேக்க மரபினர் மட்டுமே கலந்து கொண்டனர். அப்போதைய கிரேக்க சாம்ராஜ்யம் ஸ்பெயின், துருக்கி வரை பெரியாதாக இருந்தது.

போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு ஆலிவ் இலைகளால் ஆனா கிரிடம் சூட்டப்பட்டது.

இந்த ஒலிம்பிக் போட்டியை புதுபிக்க பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த பேரன் பியரி டி குபர்டின் என்பவர் விரும்பினார். அதன்படி 1896 ஏப்ரல் 6 -ம் தேதி ஏதென்ஸ் நகரில் பல நாடுகள் கலந்து கொண்ட முதல் ஒலிம்பிக் போட்டி ஆரம்பமானது. இந்த போட்டியை அப்போதைய கிரிஸ் அரசர் முதலாம் ஜார்ச் அரசன் தொடங்கிவைத்தார்.

முதல் ஒலிம்பிக் போட்டியில் 14 உலக நாடுகள் கலந்து கொண்டன. தடகள போட்டிகள், குத்துசண்டை, மல்யுத்தம், துப்பாக்கி சுடுதல், டென்னிஸ், சைக்கிள் ரேஸ், நீச்சல், ஜிம்னாஸ்டிக், பளுதூக்குதல் ஆகிய போட்டிகள் இதில் இடம் பெற்றன.

ஒலிம்பிக்கின் 11-வது நாள் மராத்தான் போட்டிகள் நடத்தப்பட்டன. முதல் மராத்தான் போட்டியில் கிரேக்க வீரர் ஸ்பிரி டான் லூயின் தங்கம் வென்றார்.

1914-ம் ஆண்டு பேரான் டி.குபர்ட் ஒலிம்பிக் கமிட்டியின் 20-வது ஆண்டு விழாவை குறிக்கும் வகையில் ஒலிம்பிக் சங்க மாநாட்டின் போது வெள்ளை நிறத்திலான ஒலிம்பிக் கொடியை நிர்வாகிகளிடம் வழங்கினார்.

1920-ல் ஆன்ட் லெர்ப் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியின் போதுதான் இந்தக் கொடி ஏற்றப்பட்டது. வெள்ளை நிறத்தில் அமைந்திருக்கும் ஒலிம்பிக் கொடியின் நடுவே அழகிய 5 வளையங்கள் ஒன்றோடு ஒன்று பின்னிபிணைந்தபடி அமைந்திருக்கும். இது ஒலிம்பிக்கில் பங்குபெரும் 5 கண்டங்களையும் குறிக்கும். மேல்புற வரிசையில் நீலம், கருப்பு, சிகப்பு நிறத்திலும் கீழ்வரிசையில் மஞ்சள், பச்சை நிறத்திலும் வளையங்கள் அமைந்திருக்கும்.

1920-ல் ஏற்றப்பட்ட கொடியைதான் 1984-ம் ஒலிம்பிக் வரை பயன்படுத்தினர். 1988 சியோல் ஒலிம்பிக்கில்தான் பழைய கொடி மாற்றப்பட்டது. புதிய கொடி ஏற்றப்பட்டது.

1896-ல் நடந்த ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் சேர்த்துக் கெள்ளப்படவில்லை. 1900-ம் ஆண்டு பாரிசில் நடந்த 2-வது ஒலிம்பிக் போட்டியில் கோல்ப், வில்வித்தை, டென்னிஸ் ஆகிய மூன்று விளையாட்டுகளிலும் பெண்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

1928-ல் தான் பெண்கள் தடகள போட்டிகளில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது. த்ற்பொது ஒலிம்பிக் பொட்டியில் பெண்கள் முக்கிய பங்கு வகிக்க ஆரம்பித்துவிட்டனர். இருந்தாலும் ஒருசில நாடுகள் சர்வதேச போட்டிகளில் பெண்கள் கலந்து கொள்ள தடை விதித்து உள்ளன.

1992- பார்சிலோனா ஒலிம்பிக் போட்டிகளின் போது ஈரான் நாட்டு கொடியை ஒரு ஸ்பானிய பெண் ஏந்திவர தேர்வு செய்யபட்டதால் அந்நாட்டு அணியினர் ரகளை செய்துவிட்டனர். அல்ஜிரியா நாட்டு வீராங்கனை ஹஸிபா பவுஸ் மெர்கா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற போதுதிறந்த காலுடன் ஓடி அசிங்கப்படுத்தினார் என்று அந்நாட்டு பழமைவாதிகள் கூறினர். சிட்னி ஒலிப்பிக்கில் பெண்கள் சாதனைகளே அதிகமாக பேசப்பட்டது.

இதுவரை ஒலிம்பிக் போட்டி நடந்த இடங்கள்:

எதென்ஸ்-1896
பாரீஸ்-1900
செயின்ட் லூயிஸ்-1904
லண்டன்-1908
ஸ்டாக்ஹோம்-1912
ஆண்ட்வெர்ப்-1920
பாரீஸ்-1924
ஆம்ஸ்டர்டாம்-1928
லாஸ் ஏஞ்சல்ஸ்-1932
பெர்லின்-1936
லண்டன்-1948
ஹெல்சின்சி-1952
மெல்போர்ன்-1956
ரோம்-1960
டோக்கியோ-1964
மெக்சிகோ-1968
முன்ஜி-1972
மோன்தொல்-1976
மாஸ்கோ-1980
லாஸ் ஏஞ்சல்ஸ்-1984
சியோல்-1988
பார்சிலோனா-1992
அட்லாண்டா-1996
சிட்னி-2000
எதென்ஸ்-2004
பீஜிங்-2008

27 ஆண்டு சிறைவாசத்துக்கு பிறகு தென்ஆப்பிரிக்க தலைவர் மண்டேலா விடுதலை

27 ஆண்டு சிறைவாசத்துக்கு பிறகு தென்ஆப்பிரிக்க தலைவர் மண்டேலா விடுதலை
தென்ஆப்பிரிக்க (கறுப்பர் இன) தலைவர் நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறையில் இருந்தபின் விடுதலை செய்யப்பட்டார். தென்ஆப்பிரிக்க நாட்டில் கறுப்பர்கள் (நீக்ரோக்கள்) பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். அங்கு வெள்ளையர்கள் சிறுபான்மையினர். ஆனாலும் ஆட்சி பீடத்தில் வெள்ளையர்களே அமர்ந்தார்கள்.
கறுப்பர்களின் நலனை பாதுகாப்பதற்காக "ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ்" என்ற கட்சி உருவானது. அதன் தலைவரான நெல்சன் மண்டேலா, இன வெறி பிடித்த வெள்ளையர் ஆட்சியை எதிர்த்து போராடினார்.
அரசாங்கம் கடுமையாக கெடுபிடி செய்ததால் 1961_ம் ஆண்டில் மண்டேலா தலைமறைவானார். அவரை பிடிக்க வாரண்டு பிறப்பிக்கப்பட்டது. 1962_ம் ஆண்டு மண்டேலா கைது செய்யப்பட்டார்.
தென்ஆப்பிரிக்க அரசை கவிழ்க்க முயன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. மண்டேலாவுக்கு 1964_ம் ஆண்டு ஜுன் 12_ந்தேதி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அவருக்கு 46 வயது.
பல ஆண்டுகள் அவரை தனிமைச்சிறையில் அடைத்து கொடுமை செய்தது தென்ஆப்பிரிக்க அரசாங்கம். மனைவியை சந்திப்பதற்குகூட அனுமதி மறுக்கப்பட்டது. 1988_ம் ஆண்டு கடுமையான காச நோய் ஏற்பட்டு, மரணத்தின் எல்லைக்கே சென்றார். அதனால் வீட்டுச்சிறைக்கு மாற்றப்பட்டார்.
மண்டேலாவை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை உலகம் முழுவதும் எழுந்தது. ஆனால் தென்ஆப்பிரிக்க நிறவெறி ஆட்சியின் தலைவராக இருந்த போந்தா, மண்டேலாவை விடுதலை செய்ய மறுத்து வந்தார்.
மண்டேலாவை விடுதலை செய்யும்படி வற்புறுத்தி மண்டேலாவின் மனைவி தலைமையில் ஆர்ப்பாட்டங்களும், ஊர்வலங்களும் தொடர்ந்து நடந்து வந்தன.
"மன்னிப்பு கேட்டால் விடுதலை செய்கிறோம்" என்று தென்ஆப்பிரிக்க அரசு ஆசை காட்டியது. ஆனால் மண்டேலா மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். தென்ஆப்பிரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய ஜனாதிபதியாக டெக்ளார்க் பதவிக்கு வந்தார். அவர் மண்டேலாவை விடுதலை செய்ய முன்வந்தார்.
இதனால் மண்டேலாவின் விடுதலை நாளை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தது. மண்டேலா 11_2_1990 அன்று விடுதலை செய்யப்படுவார் என்று ஜனாதிபதி டெக்ளார்க் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
மண்டேலா 1962_ல் சிறையில் அடைக்கப்பட்டார். ஏறத்தாழ 27 ஆண்டுகள் சிறையில் இருந்தார். உலக வரலாற்றிலேயே மண்டேலாவை போல இவ்வளவு நீண்ட காலம் சிறையில் வாடிய தலைவர்கள் கிடையாது. விடுதலை பெற்றபோது அவருக்கு வயது 71.
மண்டேலாவை வரவேற்க உலகம் முழுவதும் ஏற்பாடுகள் நடந்தன. இந்தியா சார்பாக பிரதமர் வி.பி.சிங் தலைமையில் வரவேற்பு குழு அமைக்கப்பட்டது. தென்ஆப்பிரிக்க அரசாங்கம் அறிவித்தபடியே 11_2_1990 அன்று மாலையில் மண்டேலா விடுதலை செய்யப்பட்டார்.
மண்டேலாவுடன் அவர் மனைவி வின்னிகை கோர்த்தபடி சிறையில் இருந்து வெளியே வந்தார். சிறைச்சாலையின் வாசலில் ஆப்பிரிக்க நாட்டு தலைவர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் அவரை உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் வரவேற்றனர்.
ஏராளமான தொண்டர்கள் ஆப்பிரிக்க கொடியை அசைத்த படி வரவேற்றனர். சிலர் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மண்டேலாவும், அவரது மனைவியும் கூடியிருந்தவர்களை நோக்கி கையை உயர்த்தி வரவேற்பை ஏற்றுக்கொண்டனர்.
பின்னர் மண்டேலாவை போலீசார் பாதுகாப்பாக கேப்டவுன் நகருக்கு அழைத்துச்சென்றனர். சிறைச்சாலையின் வாசலில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த டெலிவிஷன் மற்றும் புகைப்பட நிபுணர்கள் அவரை படம் எடுத்தனர். மண்டேலா விடுதலையான நிகழ்ச்சி தென்ஆப்பிரிக்க நாடு முழுவதும் டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
மண்டேலா விடுதலையானதும், பிரதமர் வி.பி.சிங் அவருக்கு பாராட்டு தெரிவித்தார். மண்டேலா விடுதலையான சிறிது நேரத்தில் அவரிடம் பிரதமர் வி.பி.சிங் எழுதிய பாராட்டுக் கடிதம் கொடுக்கப் பட்டது. "உங்களது சுதந்திர போராட்டத்துக்கு இந்தியா என்றும் உறுதுணையாக இருக்கும் என்று வி.பி.சிங் அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.
மண்டேலா விடுதலை செய்யப்பட்டதை உலக தலைவர்கள் பலர் வரவேற்றார்கள். கேப்டவுன் நகருக்கு திரும்பிய மண்டேலா அங்கு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பேசினார். அவர் கூறியதாவது:-
"இனவெறி ஆட்சியை தனிமைப்படுத்த சர்வ தேச சமுதாயம் தொடர்ந்து பிரசாரம் செய்ய வேண்டும். என்னுடைய விடுதலை மட்டும் பேச்சுவார்த்தைக்குத் தேவையான அடித்தளம் ஆகாது.
நிற வேறுபாடு இல்லாமல் ஜனநாயக ரீதியில் தேர்ந்து எடுக்கப்படும் அமைப்புதான் நம் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டும். அரசியல் அதிகாரத்தின் மீது வெள்ளையர்களின் ஏகாதிபத்தியத்துக்கு முடிவு காண வேண்டும்.கறுப்பர்களுக்குச் சம உரிமை கிடைக்க வேண்டும். அதுவரை போராடுவோம்.
இவ்வாறு மண்டேலா கூறினார்.
மண்டேலாவின் முழுப்பெயர் நெல்சன் ரோபிசலா மண்டேலா. நெல்சன் மண்டேலா என்றே பொதுவாக அழைப்பார்கள்.1918_ம் ஆண்டு ஜுலை மாதம் 18_ந்தேதி தென்ஆப்பிரிக் காவில் உள்ள குலு கிராமத்தில் ஒரு மண் குடிசையில் பிறந்தார். இவரது தந்தை சோசா பழங்குடி மக்கள் தலைவர்.
மண்டேலா இளம் வயதில் ஆடு, மாடு மேய்த்துக்கொண்டே பள்ளிக்கூடத்தில் படித்தார். போர் புரியும் கலைகளையும் பயின்றார். 1941_ம் ஆண்டு ஜோகன்ஸ்பர்க் சென்று பகுதி நேரத்தில் சட்டக்கல்வி படித்தார். ஒரு தங்கச் சுரங்க பாதுகாப்பு அதிகாரி யாகவும், எஸ்டேட் ஏஜெண்டாகவும் வேலை பார்த்தார்.
அப்போது நோமதாம் சங்கர் என்ற நர்சை திருமணம் செய்து கொண்டார். மண்டேலா ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு இருந்ததால் மனைவிக்கும், அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின்னர் தென் ஆப்பிரிக்க அரசு, ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியை தடை செய்தது. மண்டேலா மீது வழக்கு தொடரப்பட்டது.
5 ஆண்டுகளாக அந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டு இருந்தபோது 1958_ம் ஆண்டு வின்னி மடிகி லேனா என்பவரை மணந்தார். வின்னி தலைவரின் கொள்கைகளுக்காக போராடி வந்தார். மண்டேலாவுக்கு முதல் மனைவி மூலம் 3 குழந்தைகள்; 2_வது மனைவி மூலம் 2 குழந்தைகள்.
உலக சமாதானத்துக்காக மண்டேலா ஆற்றிய சேவைகளை பாராட்டி அவர் சிறையில் இருக்கும்போதே இந்திய அரசு "நேரு சமாதான விருது" வழங்கியது. கணவர் சார்பில் வின்னி டெல் லிக்கு வந்து அந்த விருதை பெற்றார்.மண்டேலாவின் தியாகம் வீண் போகவில்லை. 1994 மே 10_ந்தேதி அவர் தென்ஆப்பிரிக் காவின் அதிபர் ஆனார்.
அவர் அதிபர் ஆனபின், 1998_ம் ஆண்டு முதல் தென் ஆப்பிரிக்க பள்ளிகளில் தமிழ், தெலுங்கு, இந்தி, குஜராத், உருது ஆகிய மொழிகளை கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்தார்.

Followers

Please put vote